2 டாக்டர்கள்.. 3 மாவட்டங்கள்.. ஏமாற்றிய புதுக்கோட்டை.. தாக்கு பிடிக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் தொற்று உறுதியானது
சென்னை: தமிழகத்தில் வைரஸ் நோய் தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே அதற்காக போராடி வரும் 2 தமிழக டாக்டர்கள் அன்புமணி ராமதாஸ், விஜயபாஸ்கர் ஆகியோர்!! இதில் சுகாதாரத்துறை அமைச்சரின் தொகுதியிலேயே நேற்று வைரஸ் பரவியுள்ளதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டாக்டர் விஜயபாஸ்கரை பொறுத்தவரை, சட்டசபை கூட்டம் நடக்கும்போதே இந்த வைரஸ் பற்றின விவரங்கள், தகவல்கள், சந்தேகங்கள், பதில்கள், அறிவிப்புகள் போன்றவற்றை புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்.
அரசு மருத்துவமனைகளில் ஆய்வு, செய்தியாளர் கூட்டம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய தொகுதிக்குள் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். சென்னையில் பணி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாவட்டத்துக்கு நேரடியாகவே வந்து ஆய்வு செய்தார்.. அப்படி இருந்தும் புதுக்கோட்டைக்கு கொரோனா வந்து விட்டது.
டாக்டர்கள்
இதே புதுக்கோட்டையில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.. பொதுவாக, நோயாளிகளை கையாள்வதற்கு முன்பு டாக்டர்கள், நர்ஸ்கள் அவர்களின் பாதுகாப்பு உடைகளை அணிவதற்கு மட்டும் 15 நிமிஷம் ஆகுமாம்.. அதனால் முழுமையான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல், பரிசோதனை செய்யும் வகையில் ஒரு புது முயற்சியைகூட புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறிமுகப்படுத்தினர்.
மாதிரிகள்
அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட அந்த வார்டில் பரிசோதனை கதவு முழுமையாக சாத்தப்பட்டு, 2 கைகளை மட்டும் உள்ளே செல்லும் வகையிலான 2 ஓட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. அதாவது நோயாளிக்கும் டாக்டருக்கும் நடுவே தடுப்பு இருக்கும்.. டாக்டர்கள் இந்த துவாரம் வழியாக பாதுகாப்பு உறை அணிந்த கைகளை மட்டும் வெளியே கொண்டு வந்து பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்தனர்.. இதனால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர் இருமும்போதும் தும்மும்போதும்கூட டாக்டர்கள் மீது தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த அளவுக்கு பார்த்து பார்த்து கவனத்துடன் கையாளப்பட்ட தொகுதிதான் புதுக்கோட்டை!!!
ஊரடங்கு
இதைதவிர, கொரோனா நிவாரண நிதியை தொகுதிக்குள் விஜயபாஸ்கர் தரும்போது, அவருடன் பின்னாடியே ஆதரவாளர்கள் கும்பல் வந்தது.. ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளது, யாரும் தன்னுடன் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு தனியாகத்தான் நிவாரண நிதியை ஊர் முழுக்க தந்து வந்தார். இப்படி கண்ணுக்குள்ளேயே வைத்து பார்க்கப்பட்ட தொகுதியில் தொற்று வந்துள்ளது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. சம்பந்தப்பட்டவர் டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவராம்!
அன்புமணி ராமதாஸ்
இன்னொரு டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. இவர் ஒரு சீனியர்.. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்.. பல சீர்திருத்தங்களை அமல்படுத்தியவர்.. தமிழகத்தில் டெங்கு உட்பட எந்த அபாயம் வந்தாலும் சரி, அதற்கு முதல் ஆளாக வந்து எச்சரிக்கை தந்து அறிவுரைகளை தந்துவிடுவார்.. இந்த கொரோனா விஷயத்தில் அன்புமணியின் ஈடுபாடும் சரி, டாக்டர் ராமதாஸின் ஈடுபாடும் சரி அளப்பரியது.. மக்களுக்கு தினமும் ஏதாவது ஒரு டிப்ஸ்களை தந்து இன்றுவரை அலர்ட் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அச்சம்
இப்போது துவங்கியுள்ள இந்த சமூக தொற்று பரவிவிட கூடாது என்றுதான் அன்புமணி ஆரம்பத்தில் இருந்தே கதறி கதறி மக்களிடம் கேட்டு கொண்டார்.. அச்சம் தெரிவித்தார்.. விடாமல் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தபடி இருந்தார்.. இப்போதும் அப்படித்தான் உள்ளார்.. இதில் ஒரு நல்ல சமாச்சாரம் இதுவரை தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு கொரோனா அபாயம் எட்டிப் பார்க்கவில்லை. இதற்கு காரணம் மிக சரியான திட்டமிடல் என்றும் சொல்லலாம்.
எல்லைகள்
தர்மபுரியை சுற்றி இருக்கும் முக்கியமான மாவட்டங்கள் எல்லாவற்றிலுமே வைரஸ் தாக்கியுள்ளதுஆனால் தர்மபுரி தப்பிவிட்டது.. முதல் வேலையாக இவர்கள் எல்லையை மூடிவிட்டனர்.. மேலும் அந்த எல்லைகளில் 24 மணி நேரமும் காவலுக்கு போலீஸை நிற்க வைத்துவிட்டனர்.. விடிய விடிய சோதனை, கண்காணிப்பு என தர்மபுரி போலீசார் சுற்றி சுற்றி வந்தனர்.. வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு தினமும் அம்மாட்ட கலெக்டரே தனித்தனியாக போன் செய்து விசாரித்தபடி வந்தார்.. எல்லைகள் மூடப்பட்டதால் யாரும் வெளியே போகவும் இல்லை, வெளியே இருந்து வரவும் இல்லை.. சுருக்கமாக சொல்ல போனால் ஆபரேஷன் ஷீல்ட் வைத்து மாவட்டத்தை காப்பாற்றினர்.. அந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் நடந்ததால்தான் இப்போதுவரை எந்த பாதிப்பும் இல்லை.
சுகாதார அமைச்சர்
இந்த விஷயத்தை வைத்து இரு டாக்டர்களின் முயற்சிகளை ஒப்பிட முடியாது... அது அறிவிலித்தனம்.. விஜயபாஸ்கரின் தனிப்பட்ட தோல்வியோ, சுகாதார துறை அமைச்சரின் தோல்வியோ இது கிடையாது.. எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் வைரஸ் வந்துள்ளதற்கு புதுக்கோட்டை உதாரணமாக உள்ளது.. இங்கு ஏதோ ஒரு இடத்தில் தவறு நிகழ்ந்திருக்கலாம்.. அசால்ட் காரணமாக இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம்.. அதேசமயம் தர்மபுரி, கிருஷ்ணகிரி இந்த இரு மாவட்டங்களையும் போல மற்ற மாவட்டங்களும் கொரோனா அரக்கனிடமிருந்து விடைபெறும் நாளுக்காக மக்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர்.
அர்ப்பணிப்பு
இந்த மாவட்டங்களை போலவே தங்களது மாவட்டங்களிலும் விடுபட்ட செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஏதாவது இருப்பின் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்!! எனினும், 2 டாக்டர்களான விஜயபாஸ்கரும் சரி, அன்புமணியும் சரி.. இவர்களின் அர்ப்பணிப்பு, அக்கறை. விடா முயற்சி, மக்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் எந்நேரமும் இவர்களின் செயல்களில் தெரிந்து கொண்டே இருக்கிறது!!