திமுக குடும்பத்திற்கு பிழைப்பு தரும் எம்ஜிஆர்.. எஸ்வி சேகர் டிவீட்.. திட்டி தீர்க்கும் திமுகவினர்
திமுகவை சாடி எஸ்வி சேகர் ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "திமுக குடும்பத்திற்கு பிழைப்பு கொடுக்கிறார் எம்ஜிஆர்.. இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி பிழைப்பு தரும் MGR the Great என்று பாஜக ஆதரவாளர் எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு பேட்டி தந்திருந்தார்... அதில், "கொரோனாவைரஸ் பெருந்தோற்று காலத்தில் அமெரிக்கவாக இருந்தாலும் சரி, ஏழை நாடாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்குத் தேவையான பொருளுதவி மற்றும் பண உதவிகளை அரசு முன்வந்து தருகிறது.
ஆனால், நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள்... மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில், மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு தான்" என்று தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.
கண்டனங்கள்
இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள், விமர்சனங்கள் எழுந்தன.. குறிப்பாக பாஜக தரப்பில் இது பேசுபொருளாக உருவெடுத்தது.. முதல் ஆளாக வந்து கண்டனம் சொல்லி ட்வீட் போட்டது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாதான். எம்பி தயாநிதி மாறனுக்கும், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் இடையிலான புகைச்சல் அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லும் அளவுக்கு ட்விட்டர் போர் வலுத்தது.. இப்போது இது ஓரளவு அடங்க ஆரம்பித்துள்ளது.
சந்தோஷ அலறல்
இந்நிலையில், எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், இரவு 11.06- க்கு பல வீடுகளில் அலறல் சத்தம்... எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்திற்குப் பிழைப்பு கொடுக்கிறார். அதுதான் MGR the Great என்றும், கற்பூரவாசனை தமிழகத்தில் அறிய முடியவில்லையாமே. வாழ்த்துகள் மோடி அவர்களே" என்று பதிவிட்டுள்ளார்.
திமுக
இந்த ட்வீட் படு வைரலாகி வருகிறது.. இதை பதிவை பார்த்ததும் ஏற்கனவே தயாநிதியை விமர்சித்த விவகாரத்தில் கொந்தளித்த திமுக தரப்பினர் இப்போது மேலும் சூடாகி உள்ளனர்... காட்டமான பதிலடிகள் விழுந்து கொண்டிருக்கின்றன... எனினும் திமுக தரப்பில், ஒருசிலரோ இதை "பல வீடுகளில் சன் டிவி. Great" என்று பாசிட்டிவ் கமெண்ட்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
திராவிடம்
மேலும் சிலர், "அப்போ திராவிட டிவி சன்டிவிய பார்த்திருக்கீக... எல்லாரையும் பார்க்க சொல்லி போஸ்ட் வேற" என்றும், "MGR திராவிடத்தை ஆதரித்தார், பெரியாரை மதித்தார். கட்சிகள் தான் வெவ்வேறே தவிர கொள்கை ஒன்றுதான். அதனால்தான் தமிழகம் இன்று அத்தனை மாநிலங்களிலும் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கிறது" என்றும் கமெண்ட்கள் குவிகின்றன.