சென்னை அரும்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி?.. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகிறார்கள். எனினும் இதை தமிழக அரசு உறுதிப்படுத்தவில்லை.
சென்னை அரும்பாக்கத்தில் அசோக்நகரில் உள்ள வெளிமாநிலத்தவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலின்பேரில் சுகாதாரத் துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து அவரது உடல் முழுவதையும் மூடி பாதுகாப்பாக அழைத்து சென்றது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
எனினும் இதன் நம்பகத்தன்மை தெரியவில்லை. இதுகுறித்து தமிழக அரசும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 168 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துவிட்டனர். தமிழகத்தை பொருத்தவரை இதுவரை இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.
ஏற்கெனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஓமனில் இருந்து வந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இவரது குடும்பத்தினர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் கொரோனா இல்லை என முடிவுகள் வந்ததை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர்தான் தமிழகத்தின் முதல் கொரோனா நோயாளியாவார். அது போல் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
கொடுமை.. காதலித்து கர்ப்பமாக்கி.. காப்பு காட்டில் பிரசவமும் பார்த்து.. அதுவும் யூடியூப் பார்த்து!
இந்த நிலையில் இரண்டாவதாக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததும் அதில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் இன்னொருவர் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.