27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்
சென்னை: கொரோனா வைரசுக்கு எதிராக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் கூட தமிழகம் முழுக்க அம்மா உணவகங்கள் மக்களுக்கு பெரிய அளவில் பசியாற்றி வருகிறது.
Recommended Video
ஒரு முன் மாதிரி திட்டம் எப்படி எல்லாம் மக்களுக்கு உதவும் என்பதற்கு தற்போது அம்மா உணவகம் சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அம்மா உணவகம் கொண்டு வரப்பட்ட போது நாடு முழுக்க அது முன் மாதிரி திட்டமாக பார்க்கப்பட்டது. கேரளா, டெல்லி, கர்நாடகா என்று முன்னணி மாநிலங்கள் இதை உடனே தங்கள் மாநிலத்திலும் அறிவித்தது.
தற்போது இந்தியா முழுக்க லாக் டவுன் இருக்கும் நிலையில் மக்கள் உணவின்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக தினசரி வருமானத்தை நம்பி இருக்கும் மக்கள் இந்த லாக் டவுன் காரணமாக மிக மோசமாக சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
தடையின்றி இயங்கி வருகிறது
இந்த நிலையில் பல மாநிலங்களில் மக்கள் இப்படி உணவிற்காக கஷ்டப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏழை மக்களுக்கு சென்னையில் எப்போதும் போல உணவு வழங்கிக்கொண்டு இருக்கிறது அம்மா உணவகம். ஆம், கொரோனா வைரசுக்கு எதிராக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் கூட தமிழகம் முழுக்க அம்மா உணவகங்கள் மக்களுக்கு பெரிய அளவில் பசியாற்றி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் முன்பை விட இப்போது உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர் என்பதுதான்.
தரம் கொஞ்சம் கூட குறையவில்லை
அதேபோல் முன்பை விட இப்போது அதிக தரத்துடன் உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் வந்த தொடக்க காலத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் இடையில் கொஞ்சம் இதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு இருக்கும் நிலையில் மிகவும் தரமாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது. மிகவும் தூய்மையான முறையில், அதே சமயம் நல்ல சுவையுடன் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பாக உள்ளது
இதெல்லாம் போக கொரோனா பரவி வருவதால் தற்போது அனைத்து ஊழியர்களும் முக கவசம் அணிந்துள்ளனர். பரிமாறுபவர்கள் கையுறை அணிந்துள்ளனர். அதேபோல் அங்கு உணவு சமைக்கும் இடம் மிக சிறப்பாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருக்கும் அனைத்து அம்மா உணவகங்களும் தற்போது இயங்கி வருகிறது.
எத்தனை இட்லிக்கள்
தமிழக அரசு வெளியிட்ட கணக்குப்படி கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து நேற்று வரை தமிழகத்தில் அம்மா உணவகங்கள் 407 சென்னையில் மட்டும் இயங்கி உள்ளது. மொத்தம் 26.23 லட்சம் இட்லிக்கள் மக்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. 8 லட்சம் வெரைட்டி ரைஸ் உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது போக 15 லட்சம் பேருக்கு சப்பாத்தி தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களில் உற்பத்தி 30% உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் 15 லட்சம் பேர் லாக் டவுனுக்கு பிறகு வந்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் எப்படி இயங்கியது?
அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மக்களுக்காக மட்டுமே இதை இயக்கி வருகிறோம் என்று தமிழக அரசு சட்டசபையில் தெரிவித்து இருந்தது. அதே அம்மா உணவகம்தான் தற்போது மிக சரியான நேரத்தில் மக்களுக்கு பசியை போக்கி உள்ளது. உணவின்றி இந்திய தலைநகர் டெல்லியில் மக்கள் சொந்த ஊர்களுக்கு அகதி போல செல்லும் போது.. சென்னை மட்டும் யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் உணவளித்து வருகிறது.