கொரோனா: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மார்ச் 31 வரை மூடல்- டாஸ்மாக் பார்களையும் மூட உத்தரவு!
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் மார்ச் 31-ந் தேதி வரை மூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
இந்தியாவிலும் 100க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா அறிகுறி தென்படுகிறவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தொடக்க பள்ளிகள் விடுமுறை
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மழலையர், தொடக்க பள்ளிகளுக்கு வரும் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். அதேபோல் அண்டை மாநில எல்லைகளில் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள், மால்கள் ஆகியவற்றை மூடவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
பள்ளிகள், கல்லூரிகள் மூடல்
இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் இன்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், அனைத்து பள்ளிகள், கல்லூரிகளையும் மார்ச் 31-வரை மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திரை அரங்கம், பார்கள் மூடல்
மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளையும் மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. திரை அரங்குகள், உயிரியல் பூங்காங்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு அரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள், கிளப்புகள் ஆகியவையும் மூடப்படும். வணிக கண்காட்சி, விளையாட்டு போட்டிகள், கோடைகால பயிற்சிகளுக்கும் மார்ச் 31 வரை அனுமதி இல்லை.
அங்கன்வாடி மையங்கள்
அதேபோல் மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்துவதற்கும் மார்ச் 31- வரை அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மையங்களும் மார்ச் 31- வரை மூடப்பட்டாலும் 15 நாட்களுக்கான உணவுப் பொருட்கள் அந்த குழந்தைகளின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- முதல்வரின் விரிவான அறிக்கை விவரம்: