தமிழக எல்லைகள் நாளை முதல் மூடல்; மார்ச் 22-ல் அரசுப் பேருந்துகள் ஓடாது - எடப்பாடி பழனிசாமி
சென்னை: கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லைகளை இணைக்கும் சாலைகள் நாளை முதல் மார்ச் 31-ந் தேதி வரை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் மார்ச் 22-ல் அரசு பேருந்துகள் ஓடாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாநிலங்கள் படுதீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் முக்கிய நடவடிக்கையாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லைகளை இணைக்கும் சாலைகளை நாளை முதல் மார்ச் 31-ந் தேதி வரை மூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து எல்லைகள் வழியாக வரும் நபர்கள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர்; வாகனங்களும் நோய் தடுப்பு நடவடிக்கைக்குட்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் மார்ச் 22ல் அரசு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளார்.
அத்துடன், மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்; முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியே நடமாட வேண்டாம்; பொதுமக்கள் பதற்றத்துடன் பொருட்களை வாங்க தேவை இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 31-ந் தேதி வரை அனைத்து அரசு, தனியார் நூலகங்களும் மூடப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.