குறைவான டெஸ்ட்.. அதிக பேருக்கு கொரோனா.. இந்த ஒரு டேட்டாதான் அதிர்ச்சி தருகிறது.. தமிழகத்தின் நிலை!
அண்டை மாநிலங்களை விட குறைவான அளவில் டெஸ்ட் செய்தும் கூட, தமிழகத்தில் அதிகமான நபர்களுக்கு கொரோனா பரவி உள்ளது.
சென்னை: அண்டை மாநிலங்களை விட குறைவான அளவில் டெஸ்ட் செய்தும் கூட, தமிழகத்தில் அதிகமான நபர்களுக்கு கொரோனா பரவி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவி உள்ளது குறித்து வெளியாகி இருக்கும் டேட்டா அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
இந்தியா முழுக்க மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 234 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 265 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகமாக 335 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 56 பேர் இதனால் பலியாகி உள்ளனர். 169 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1793 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகமான டெஸ்ட் எங்கே
இந்தியாவில் அதிகமான கொரோனா டெஸ்ட் செய்தது கேரளாதான். கேரளாவில்தான் அதிக நபர்களுக்கு மொத்தமாக 6698 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இவ்வளவு வேகமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுவது இல்லை. கேரளாவில் மொத்தம் 265 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் சதவிகிதம் 3.9% ஆகும்.
ராஜஸ்தான் எப்படி இருக்கிறது?
அதேபோல் ராஜஸ்தானில் மொத்தம் 4085 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு 125 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் சதவிகிதம் வெறும் 3% என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குறைவான கொரோனா சதவிகிதம் கொண்ட மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்றாகும். அதே போல் மஹாராஷ்டிராவில் 4205 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் நிலை என்ன?
இந்தியாவில் மஹாராஷ்டிராவில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 335 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக சோதனை செய்யப்பட்டவர்களில் 7.8% பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட இதே நிலைதான் இருக்கிறது. அங்கு 3243 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா டேட்டா என்ன
அங்கு மொத்தம் 110 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்டவர்களில் மொத்தம் 3% பேருக்கு மட்டும்தான் கொரோனா ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 2500 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 117 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் சோதனை செய்யப்பட்டவர்களில் மொத்தம் 4.8% பேருக்கு மட்டும்தான் கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் அதிர்ச்சியான நிலை
ஆனால் இங்குதான் தமிழகத்தின் டேட்டா கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,726 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பாசிட்டிவ் 234. நேற்று மட்டும் 110 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டவர்களில் 9% பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் அதிக பேருக்கு சதவிகித அடிப்படையில் கொரோனா ஏற்பட்டுள்ளது.
எண்ணிக்கை அதிகம் ஆக வாய்ப்பு
தமிழகத்தில் கூடுதலாக சோதனை செய்ய செய்ய இந்த எண்ணிக்கை அதிகம் ஆக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இப்போதுதான் கொரோனா சோதனை வேகம் எடுத்துள்ளது. இனி வரும் நாட்களில் அதிக பேருக்கு கொரோனா சோதனை நடக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். தமிழகத்தின் நிலை வரும் நாட்களில் மோசம் அடைய வாய்ப்புள்ளது.