டெஸ்டிங் எல்லாம் ஓகே.. இதில்தான் பின்தங்கிவிட்டோம்.. மோசமாகும் கொரோனா "டிடிபி ரேட்".. ஷாக் டேட்டா!
சென்னை: தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா சோதனைகள் மேற்கொண்டாலும் கூட இன்னொரு பக்கம் டெஸ்ட்டிங்/பாசிட்டிவ் கேஸ் விகிதத்தில் பெரிய அளவில் பின்தங்கி இருக்கிறோம்.
தமிழகத்தில் தற்போது 257613 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 56998 பேர் தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளாக இருக்கிறார்கள். தொடர்ந்து கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது 196483 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4132 பேர் பலியாகி உள்ளனர்.
நடிகர் கருணாஸ் பொறுப்புடன் பேச வேண்டும்... பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது... கொங்கு ஈஸ்வரன் அறிவுரை
டெஸ்டிங் எத்தனை
தமிழகம்தான் கொரோனா சோதனையில் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 2779062 கொரோனா மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா - 23 லட்சம் மாதிரிகளை சோதனை செய்துள்ளனர்.
- ஆந்திர பிரதேசம் - 20.7 லட்சம் மாதிரிகளை சோதனை செய்துள்ளனர்.
- டெல்லி - 10.6 லட்சம் மாதிரிகளை சோதனை செய்துள்ளனர்.
- உத்தர பிரதேசம் - 25 லட்சம் மாதிரிகளை சோதனை செய்துள்ளனர்.
- கர்நாடகா - 15 லட்சம் மாதிரிகளை சோதனை செய்துள்ளனர்.
- கேரளா - 8.2 லட்சம் மாதிரிகளை சோதனை செய்துள்ளனர்.
ஆனால் என்ன
ஆனால் தமிழகத்தில் என்னதான் அதிக கொரோனா சோதனைகளை செய்து இருந்தாலும் தமிழகம் இன்னும் டெஸ்ட்டிங்/பாசிட்டிவ் கேஸ் (டிடிபி - டெஸ்ட் பெர் பாசிட்டிவ் கேஸ்) விகிதத்தில் பெரிய அளவில் பின்தங்கி இருக்கிறோம். அது என்ன டெஸ்ட்டிங்/பாசிட்டிவ் கேஸ் என்று கேட்கலாம். அதாவது தமிழகத்தில் ஒரு இடத்தில் ஒரு கொரோனா கேஸ் வருகிறது என்றால், அதை கண்டுபிடிக்க எத்தனை சோதனைகள் செய்யப்பட்டது என்பதற்கான சதவிகிதம் ஆகும். அதாவது 10 சோதனைகள் செய்து ஒரு கேஸ் கண்டுபிடிக்கப்பட்டால் டிடிபி விகிதம் 10 ஆகும்.
தமிழகம் எப்படி
தமிழகத்தில் தற்போது 10.8 சோதனைகள் செய்தால் சராசரியாக 1 கேஸ் வருகிறது. அதாவது 10 பேரிடம் சோதனை செய்தால் ஒருவருக்கு கொரோனா உள்ளது. இது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். ஏனென்றால் கேரளாவில் 33.6 பேருக்கு சோதனை செய்தால் மட்டுமே ஒரு கொரோனா கேஸ் வருகிறது. இதன் அர்த்தம் கேரளாவில் டிடிபி விகிதம் நன்றாக உள்ளது. தமிழகத்தில் மோசமாக உள்ளது.
இன்னும் அதிகரிக்க வேண்டும்
இந்த மதிப்பு 10 என்று இருப்பது மிகவும் ஆபத்து என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மக்கள் இடையே கொரோனா அதிக அளவில் பரவி இருப்பதை இது காட்டுகிறது. பரவல் அதிகமாக அதிகமாக இந்த விகிதம் மோசமாகும். இன்று 10 பேரை சோதனை செய்தால் ஒரு கேஸ் வருகிறது. நாளை 5 பேரை சோதனை செய்தாலே ஒரு கேஸ் வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுகிறார்கள்.
நிலைமை மோசமாக கூடாது
நிலைமை மோசமாகும் முன் டெஸ்டிங்கை அதிகரிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளவர்களை டார்கெட் செய்து அவர்களை சோதனை செய்ய வேண்டும். இப்போது 60 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் செய்யப்படுகிறது.இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் டெஸ்ட்டிங்/பாசிட்டிவ் கேஸ் மதிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு மாநிலம்
தற்போது மகாராஷ்டிராவில் 8 பேருக்கு சோதனை செய்தால் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லியில் இதன் மதிப்பு 9.2 ஆக உள்ளது.தமிழகம் இவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் தமிழகம் இந்த விகிதத்தில் 50 என்ற நிலையை அடைய வேண்டும். அதாவது 50 பேருக்கு சோதனை செய்தால் ஒருவருக்கு பாதிப்பு என்ற நிலையை அடைய வேண்டும். அதுவரை துரிதமாக சோதனைகளை செய்ய வேண்டும் என்று , மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.