என்னது.. கற்பூரத்துடன் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடணுமா.. டாக்டர் தமிழிசை சொல்வதை கேளுங்க!
பச்சை கற்பூரம் சாப்பிடுங்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: கற்பூரத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. அல்லது பச்சை கற்பூரத்தை சர்க்கரை பொங்கலில் சேர்த்து தயார் செய்து சாப்பிடுங்கள்.. கோவிட்-19 மருந்து கலவையில் கற்பூரம் இருக்கிறது" என்று டாக்டரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜான் டிப்ஸ் தந்துள்ளார்.
கோவிட்-19 மருந்துக் கலவையில் கற்பூரம் இருப்பதாகவும், ஆகையால் கற்பூரத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ளது.. எல்லா மாநிலத்திலும் ஊடுருவி கலக்கத்தை தந்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அந்தந்த மாநில அரசுகள் இறங்கி உள்ளன. அதேசமயம், இந்த கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.
மாத்திரைகள்
லட்சக்கணக்கான டாக்டர்கள் இதற்கான மருந்ததை கண்டுபிடிக்கதான் இரவு, பகலாக போராடி கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில், மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனாவைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
மருந்துகள்
இந்த மருந்துகளை இந்தியா அதிக அளவில் தயாரித்து வருகிறது.. அதனால் ஏராளமான உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை வாங்கி வருகின்றன... இதனிடையே, கொரோனாவுக்கான மருந்துகள் குறித்து டாக்டரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில குறிப்புகளை பதிவிட்டுள்ளார்.
ஆயுர்வேதம்
அதில் "சார்ஸ் கோவி-2 மற்றும் கோவிட்19-க்கான மருந்துகளை பற்றி பாருங்கள்... அந்த கலவையில் கற்பூரம் இருக்கிறது... பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் கற்பூரம் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ப்ளேக், இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவியபோதெல்லாம் இந்த கற்பூரம்தான் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அதனால், கற்பூரத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது பச்சை கற்பூரத்தை சர்க்கரை பொங்கலில் சேர்த்து தயார் செய்து சாப்பிடுங்கள்..
பிரார்த்தனை
ஆனால், ஒரு எச்சரிக்கை, இது லேப்களில் ஆராய்ச்சியில் இருப்பவை.. அதிகாரிகள் அங்கீகரிக்கும் வரை நேரடியாக நாம் இதை சாப்பிட கூடாது... நமது பாரம்பரிய மருந்தான கற்பூரத்தை சிகிச்சை இல்லாத தொற்றுகளுக்கு மருந்தாக திரும்பவும் கண்டுபிடிக்கப்பட்டதில் நமக்கு பெருமையே!!" என்று தெரிவித்துள்ளார். டாக்டர் தமிழிசையின் இந்த ட்வீட் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.