9 வருஷமா ஆட்சியில் இல்லை.. பணமும் இல்லை.. தொடர்ந்து மக்களிடம் நெருங்கி வரும் திமுக.. காரணம் இதுதான்!
மக்களிடம் வரவேற்பை திமுகவின் "ஒன்றிணைவோம் வா" பெற்று வருகிறது
சென்னை: "பணம் எங்கே இருக்கு? 9 வருஷமா ஆட்சியிலேயே இல்லையே.. அவ்வளவு பணத்துக்கு என்ன பண்றது? உதவி கேட்டு வர்றவங்களுக்கு எப்படி உதவுவது?" என்று திமுக நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனராம்.. ஆனால் "ஒன்றிணைவோம் வா" செயல்திட்டத்துக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் வர துவங்கி உள்ளது.. நிறைய உதவிகள் கேட்டு போன் கால்கள் குவிந்து வருகின்றன!!!
மிக சரியான நேரத்தில், மிக சரியான காலகட்டத்தில், சரியான ஒரு செயல் திட்டத்தை "ஒன்றிணைவாம் வா" என்ற பெயரில் திமுக தலைவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்ய ஆரம்பித்துவிட்ட நிலையில், ஒன்றிணைவோம் வா மேலும் பக்க பலமாகி வருகிறது.
நிவாரணம்
திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்து தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என்று முடிவெடுத்து, இதற்காகவே ஒரு ஹெல்ப் லைன் நம்பரும் தரப்பட்டுள்ளது. இதை தவிர ஆங்காங்கே மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள், நிர்வாகிகள் வாட்ஸ் அப் குழுக்கள் என பொதுமக்கள் நிவாரணத்தை ஒருங்கிணைப்பதையும் திமுக தலைவரே நேரடியாக கண்காணித்தும் வருகிறார்.
ஒன்றிணைவோம் வா
அதன்படி, ‘ஒன்றிணைவோம் வா' குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் வீடியோ கான்பரஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் 5 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. உதவிகள் கேட்டு நிறைய போன் கால்கள் வருகின்றனவாம்.
உற்சாகம்
இதை திமுக தரப்பே எதிர்பார்க்கவில்லையாம்.. இந்த அளவுக்கு, இவ்வளவு சீக்கிரம் மக்களிடம் இந்த திட்டம் சென்றடைந்துள்ளது திமுகவுக்கு உற்சாகத்தையே தந்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் இதில் ஒரு சிரமம் ஏற்பட்டுள்ளது.. இவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான உதவிகளை செய்ய பெரும் நிதி தேவைப்படும்... நம்பி வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லை என்றும் கைவிரித்து விட முடியாது.. எனினும் முடிந்தவரை செய்ய ஆரம்பித்திருக்கிறது திமுக... ஒருசில நிர்வாகிகள் இதனால் புலம்பவும் செய்கின்றனர்.
செயல்திட்டம்
"இவ்வளவு பேருக்கும் உதவணும்னா நிறைய பணம் வேணும்.. 9 வருஷமா ஆட்சியில் இல்லாத நிலையில், அவ்வளவு பணத்துக்கு என்ன பண்ணுறது?"என்று புலம்பல்களும் எழுந்து வருகின்றன.. இந்த நிதி நிலைமையை திமுக தலைமை கவனித்து மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை எடுக்க வேண்டும், இல்லையென்றால் இந்த செயல்திட்டத்தின் முழுமையான வெற்றி கேள்விக்குறியாகி விடும், அதுவே ஆளும் தரப்புக்கு ஒரு சாதகமாகிவிடும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
செலவு
இந்த ஒன்றிணைவோம் வா இயக்கத்தை பேஸ்புக் பக்கத்தில் விளம்பரப்படுத்த ஒரு வாரத்துக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் சொச்சம் திமுக செலவு செய்துள்ளதாக ஒரு தகவலும் கசிந்துள்ளது.. வெறும் 7 நாளுக்கு இவ்வளவு பணம் செலவு செய்தது தேவையா? அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவலாமே? என்றும் பொருமல்கள் எழுகின்றன. ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு உறுதியான தகவல்கள் என்று தெரியவில்லை.
சபாஷ்
எந்த ஒரு நல்ல திட்டம் இருந்தாலும், ஆயிரம் விமர்சனங்களை தாண்டிதான் அது மக்களிடம் செல்லும் என்பது பொதுப்படை.. எல்லாவற்றிற்கும் குறைகளை சொல்லி கொண்டு, எல்லாவற்றையுமே விமர்சித்து கொண்டு இருப்பதும் அழகல்ல.. அந்த வகையில் 9 வருஷம் ஆட்சியிலேயே இல்லையென்றாலும்சரி, இந்த ஆபத்தான கால கட்டத்தில் மக்களுக்கு உதவ முன்வந்துள்ள திமுகவின் துணிச்சலையும், ஈர மனசையும் பாராட்டவே செய்யலாம்!