"மக்கள் உயிர் முக்கியமாச்சே" தெரு தெருவாக.. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. இவர்களை பார்த்தால்!
உயிரை பணயம் வைத்து பணியினை மேற்கொள்கின்றனர் தூய்மை பணியாளர்கள்
சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர்... நோய் தொற்றில் இருந்தும் தங்களை பாதுகாத்து வருகின்றனர். மருத்துவ துறையினரோ தங்கள் உயிரை பணயம் வைத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோலவே தங்கள் உயிருக்கும் ஆபத்து என்று தெரிந்தே, சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களும் பாராட்டுக்குரியவர்களே!!
Recommended Video
இவர்கள் மட்டுமில்லை.. வீடுகளுக்கு பேப்பர் போடுபவர்கள். பால் வியாபாரிகள், கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள், மளிகை டெலிவரி செய்பவர்கள், இப்படி அனைவருமே நேரம் காலம் பார்க்காமல் கடமைகளில் உழன்று வருகின்றனர்!!
இதில் தூய்மை பணியாளர்களின் நிலை சற்று அபாயமும் கலந்தது என்றே சொல்லலாம்.. இவர்களின் அர்ப்பணிப்பை துப்புரவு தொழிலாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று ஒரு கவுரவத்தினை நம் முதல்வர் வழங்கி உள்ளார்!
பணிகள்
கடைகள், ஹோட்டல்கள், ஆபீஸ்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இவர்களின் பணி ஓரளவு குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை.. கிருமி நாசினி தெளிப்பது, தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவது என்று இவர்களின் பணி நீட்டிக்கவே செய்கிறது. தூய்மை பணியாளர்கள் சிலரை நாம் சந்தித்தோம்.. அவர்களின் மனநிலை இந்த சூழலில் எப்படி உள்ளது? நோய்த் தொற்று அபாயம் குறித்து அச்சம் இருக்கிறதா? இந்நிலையிலும் துப்புரவு பணியில் ஈடுபட வேண்டி உள்ளதே என்ற வருத்தம் மனசுக்குள் உள்ளதா? என்றெல்லாம் கேட்டோம்.
கவுரவ குறைச்சலா?
அதற்கு அவர்கள் சொன்னதாவது: "கொரோனாவுக்கு பயந்துட்டு வீட்டையும் தெருவையும் சுத்தம் செய்யாம இருந்தால் என்ன ஆகும்.. மொத்தமா நாறிடுமே.. மக்களை நோயிலிருந்து காப்பாத்தறதுல எங்களுக்கும் ஒரு பங்கு இருக்கு.. இப்பதான் இந்த வேலையை நாங்க கவுரவமா நினைக்கிறோம்.. இனி நோய் பரவாம நாங்க பாத்துக்கிடுவோம்.. இதனால எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை.. விடிகாலையிலேயே வேலையை ஆரம்பிச்சிடுவோம்.. சாயங்காலம் வரை செய்வோம்.. ஏதாவது அவசரம் என்றால் அந்த நேரத்துக்கு செல்வோம்.. அவ்வளவுதான்.. மத்தபடி உயிர் காக்கும் வேலையை நாங்களும் செய்றது பெருமையாவே இருக்கு" என்கிறார்கள்.
சிறப்பு பயிற்சி
மனமுவந்து செய்யும் இவர்களின் பணி மதிக்கத்தக்கதே.. ஆனால் தொற்று என்பது எல்லோருக்குமே ஒன்றுதான்.. அது டாக்டர்களாக இருந்தாலும் சரி, தூய்மை பணியாளர்களாக இருந்தாலும் சரி.. எப்படி வேண்டுமானாலும் பரவும்... எங்கிருந்து வேண்டுமானாலும் பரவும்... ஆபத்தான முறையில்தான் இவர்கள் தங்கள் கடமைகளை செய்து வருகின்றனர்.. மாநகராட்சி சார்பில் பாதுகாப்புக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன... இதற்கான சிறப்பு பயிற்சியும் கூட தரப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
ஆனால், டாக்டர்களுக்கே போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று புகார் உள்ள நிலையில், இவர்களில் பலருக்கும் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.. பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக இல்லை.. தரமான கிளவுஸ், மாஸ்க் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் ஒரு சில இடங்களில் எழுகிறது... அதேபோல பாதுகாப்புடன்தான் வேலை பார்க்கிறார்களா, சமூக இடைவெளியை இவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை யார் கண்காணிப்பது?
கொரோனா வார்டுகள்
வீட்டில் உள்ளவர்களையே அடிக்கடி கையை சுத்தமாக கழுவி கொள்ளும்படி அறிவுறுத்தப்படும்போது, இவர்களில் சிலர் வெறுங்கையில் குப்பைகளை அள்ளும் நிலையும் ஆங்காங்கே உள்ளது.. மெயின் ரோடுகள், சாலைகள், முச்சந்திகளில் சுத்தப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. மக்கள் எங்காவது கூட்டமாக கண்ணில் பட்டுவிட்டால் உடனே கிருமிநாசினிகளை தெளிக்கும் வேலைகளில் இறங்கிவிடுகிறார்கள்.. இப்படி பொதுவெளி என்றில்லை, கொரோனா வார்டுகளிலும் இவர்களின் பணி தொடர்வது நெகிழ்ச்சியை தந்தாலும், சமூக இடைவெளி என்பது இவர்களிடம் துளியும் கடைப்பிடிக்க முடியாத நிலை உள்ளது.
தொழிலாளர்கள்
இதில் ஒருசிலரின் நிலை சற்று பரிதாபம்தான்.. குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்கள்.. லீவு போட்டால் சம்பளம் போய்விடுமோ என்ற பீதியும் இவர்களிடம் உள்ளது.. வேலைக்கு போனால்தான் சாப்பாடு என்ற நிலையில் சில குடும்பங்களும் உள்ளன.. மகளிர் சுய உதவிக்குழு மூலமாக துப்புரவுப் பணி மேற்கொள்பவர்களுக்கு தின சம்பளம் வழங்கப்படும்.. குப்பை அள்ள கிளவுஸ், முகத்தில் மாஸ்க் இருந்தாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழல் இவர்களுக்கு உள்ளது!
சாமானியர்கள்
கூட்டுவது, அள்ளுவது, எடுப்பது, கொட்டுவது, திணிப்பது என்பதனை அவர்களுடைய வேலைதானே என்று சாதாரணமாக அவர்களை கடந்துவிட்டு நம்மால் செல்ல முடியவில்லை.. காரணம், நம் இயல்பான வாழ்வினில் ஒன்றுகலந்துவிட்டவர்கள்... நம் பொழுதுகளை ஏதோ ஒரு புள்ளிகளில் இணைக்கும் சாமானியர்கள்... "வீட்டிலேயே இருங்க" என்ற முழக்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள்!! "கைகளை அடிக்கடி கழுவுங்க " என்ற வாசகத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள்.. "சமூக விலகலை கடைபிடியுங்கள்" என்ற அறிவுறுத்தலுக்கு அப்பாற்பட்வர்கள்.. ஆனால் "வருமுன் காப்போம்" என்ற நடவடிக்கைக்கு மட்டும் ஊன்றுகோலாக இருந்து வருபவர்கள்!!!
பாதுகாப்பு முக்கியம்
மனித உயிர்களை காக்கும் டாக்டர்களை நாம் கடவுள் என்றால், தொற்று வராமல் நம்மை காக்கும் இவர்களும் ஒருவகையில் கடவுளே.. நாம் கையெடுத்து வணங்க கூடியவர்களே! ஆனால் இவர்களின் வலிகளை சமூகம் உண்மையிலேயே புரிந்துகொள்ளுமா என தெரியவில்லை.. இவர்களின் பாதுகாப்பு நமக்கு மிக மிக அவசியம்.. செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசாவையே பரலோகத்துக்கு கொண்டு போன நிலையில், இந்த தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா என்ன கரிசனம் காட்டவா போகிறது?