எங்க மாநில முஸ்லீம்களை பத்திரமா பாத்துக்கங்க.. ரம்ஜான் வந்துருச்சு.. கெஜ்ரிவாலுக்கு முதல்வர் கடிதம்
சென்னை: "தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று... டெல்லி ஆஸ்பத்திரிகளிலும், தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு சிறப்பான கவனிப்பு தர வேண்டும்.. அவர்களில் நிறைய பேர் சர்க்கரை நோயாளிகள்.. ரம்ஜான் மாதமும் தொடங்கி இருக்கிறது.. அதனால், சரியான நேரத்துக்கு அவர்களுக்கு சாப்பாடு, மருந்துகளை வழங்குமாறு அதிகாரிகளை நீங்கள்தான் கேட்டு கொள்ள வேண்டும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் தீவிரமான முயற்சிகளை கையில் எடுத்து வருகிறார்.. சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மாநிலங்களில் முந்தி சென்ற நிலையில் தற்போது பின்னோக்கி வந்து கொண்டிருக்கிறது.
தொற்று பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பெருகி வந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் அதைவிட அதிகமாகி கொண்டே வருகின்றனர்.. இந்த ஒரு பாசிட்டிவ் நிலைமைக்கு தமிழக அரசும், சுகாதாரத்துறை, மருத்துவர்களின் விடாத அர்ப்பணிப்புதான் காரணம்.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்
ஜெக்ரிவால்
இங்குள்ளவர்கள் நிலைமை இப்படி இருந்தாலும், டெல்லியில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முயற்சியில் முதல்வர் எடப்பாடியார் இறங்கி உள்ளார். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்.
முதல்வர்
குறிப்பாக தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று, டெல்லி ஆஸ்பத்திரிகளிலும், கொரோனா முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 559 பேருக்கும் சிறப்பான கவனிப்பு தர வேண்டும் என்று டெல்லி முதல்வரை, நம் முதல்வர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
ஜமாத்
"தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 559 பேர் ஆஸ்பத்திரிகளிலும், தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் இருக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்... இவர்களில் 183 பேர் எய்ம்ஸ், ஆர்ஜிஎஸ்எஸ், எல்என்எச், டிடியூ உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளிலும், 376 பேர் பதர்பூர், துவாரகா, பக்கார்வாலா மேற்கு, சுல்தான்புரி, நரேலா போன்ற இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் இருக்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள்
ஆனால், இந்த 559 பேரும் அங்கு குறைபாடுகளை சந்தித்து வருவதாக மாநில அரசுக்கு நிறைய புகார்கள் வந்துகொண்டுள்ளன.. இவர்களில் சிலர் சர்க்கரை நோயாளிகள்.. அதனால் அது தொடர்பான சில நோய்களால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்... தங்க வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்த முகாம்களில் அவர்களுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு தரப்படுவதில்லை.. கடந்த 22-ந்தேதி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்த முகமது முஸ்தபா ஹாஜியார் உயிரிழந்துவிட்டார்.
புகார்கள்
அதனால், தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருப்பவர்களும், ஆஸ்பத்திரிகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய குறைகளையும் புகார்களையும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை கமிஷனருக்கு சொல்கிறார்கள்.. அப்படி தெரிவிக்கப்படும் புகார்கள், குறைகளை நிவர்த்தி செய்வதற்காக டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளின் கவனத்துக்கோ தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை கமிஷனரும் கொண்டு செல்கிறார்.
ரம்ஜான் மாதம்
ஆகவே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருப்பவர்களுக்கு சிறப்பான கவனிப்பு தர வேண்டும்.. அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீங்கள்தான் உத்தரவிடவேண்டும்... சர்க்கரை நோயாளிகள், அது தொடர்பாக அவதிப்படுபவர்களுக்கும் தேவையான மருந்து, மாத்திரைகளுடன் மருத்துவ உதவிகளை வழங்கவும் அறிவுறுத்த வேண்டும். ரம்ஜான் மாதம் தொடங்கி இருக்கிறது.. அதனால், சரியான நேரத்துக்கு அவங்களுக்கு சாப்பாடு, மருந்துகளை வழங்குமாறு அதிகாரிகளை நீங்கள்தான் கேட்டு கொள்ள வேண்டும்" என்று முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.