டாக்டர்கள் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்கள் நலனும் காக்க வேண்டும்.. களப்பணியில் கவனம் சகோதர, சகோதரிகளே
பத்திரிகையாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
சென்னை: தமிழகத்தில் செய்தியாளர்கள் கொரோனா தொற்றால் ஒவ்வொருவராக பாதிக்கப்பட்டு வருவது வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது.. மக்கள் சேவையில் தங்களையே விழைத்து கொண்டு, அபாயத்தை உணர்ந்தும் கடமையாற்றுகிறார்கள்.
Recommended Video
நடப்பில் உள்ள எல்லா வளர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும், வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாய் - ஆணிவேராய் திகழ்வது பத்திரிகைகளும் மீடியாக்களும்தான்!
உலகம் பயணித்து கொண்டிருக்கும் இந்த கடினமான நேரத்திலும் இவைகளின் பணி அளப்பரியது.. நோயிலிருந்து உயிர்க்காக்கும் மருத்துவர்களும், நோய் வராமல் தடுக்கும் தூய்மை பணியாளர்களும் உயர்த்தப்பட்ட அளவிற்கு மீடியாக்காரர்களை பல தரப்பினரும் மறந்தது ஏன் என்று தெரியவில்லை.
நிகழ்வுகள்
இந்த நேரத்தில் வேறு வழியும் இல்லை.. எல்லா செய்திகளையும் எல்லா தரப்புக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டி உள்ளது.. அன்றாட நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதை வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.. செல்லும் இடங்கள் எத்தகைய ஆபத்துக்கள் நிறைந்தவை, தொற்று எண்ணிக்கை என்ன, விளைவுகள் என்ன என்பதை பற்றி கிஞ்சித்தும் யோசிக்காமல் துணிந்தவர்கள்!
நாளிதழ்கள்
சமூக விலகலை கடைப்பிடித்து வந்தே இன்று தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் 3 பத்திரிகையாளர்களுக்கு தொற்று என்பதுமே அதிர்ந்து போனோம்.. நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயது பத்திரிகையாளர், தனியார் டிவிக்களில் பணியாற்றி வந்த 2 பேருக்கும் என ஒரே நாளில் 3 பேர் என்ற அதிர்ச்சி தகவல் வந்தது.. மும்பையில் பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
ஊழியர்கள்
இதில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என களத்தில் பணியாற்றிய 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரு டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. பிரேக்கிங் செய்தி ஆசிரியர் மற்றும் அவருடன் தங்கியிருந்த 4 பேர்தான் பாதிக்கப்பட்டவர்கள்.. அதில் 2 பேர் நிருபர்கள் என்றும் மேலும் பலருக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வீடியோ
மேலும் இன்னொரு டிவியிலும் சப்-எடிட்டர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இதனால் டிவி சேனல் இழுத்து மூடப்பட்டுள்ளது.. இதற்கான விளக்கத்தை அதன் நிர்வாக இயக்குனர் ஐசக் லிவிங்ஸ்டன் வீடியோ மூலமும் சொல்லி உள்ளார்.. "எங்களது தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு சகோதரருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. வேறு சில தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
காட்டமான பேச்சு
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் விதமாக எங்களது தொலைக்காட்சி நேற்றும் இன்றும் தனது செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. யார் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை நம்முடைய சேனல் ஒளிபரப்பியாக வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை" என்று காட்டமாக கூறியுள்ளார்.
விஜயபாஸ்கர்
தொடர் பாதிப்புகள் நடந்து வருவதால்தான், செய்தியாளர்கள் சந்திப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் மன்றமும் அறிக்கை விட்டு கேட்டு கொண்டது.. ஆனால் எல்லாவற்றையும் மீறி நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.. அந்த சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம், ஸ்டாலின் மலிவான அரசியல் செய்கிறார் என்று விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
பிரஸ் மீட்?
இந்த ஆபத்திலும், செய்தியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தெரிந்தும் இப்படி விமர்சனம் சொல்லி ஒரு பிரஸ் மீட் தேவையா? சொல்ல வரும் தகவல்களையும், கொரோனா குறித்த அப்டேட்களையும் அறிக்கை வாயிலாக விடுத்தால் போதுமானதாக இருந்திருக்கும்.. பிரஸ் மீட் வைக்கவில்லை என்றால் இந்த சூழலில் யாரும் யாரையும் தவறாக நினைக்கவே மாட்டார்கள்.. குறிப்பாக தமிழக அரசை!! இப்போதுவரை அரசின் செயல்பாட்டில் சின்ன பிழையையும் யாரும் சுட்டிக்காட்டவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாகவே உள்ளது.
உயிரிழப்பு
அதனால் செய்தியாளர்கள் சந்திப்பு என்பதை முற்றிலும் அரசு தவிர்க்க வேண்டும்.. சில தினங்களுக்கு முன்பு முதல்வர் செய்தியாளர் சந்திப்பில், "அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு தொற்று ஏற்பட்டால் மொத்த செலவையும் அரசே ஏற்கும்... அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்" என்றும் கூறியிருந்தார். இது வரவேற்கத்தக்கது!!
அங்கீகார அட்டை
எனினும் அரசு அறிவிப்புகள் 15-20 சதவீதம் பத்திரிகையாளர்களுக்குகூட பலன் தராது.. காரணம் நிறுவனங்களில் பெரும்பாலானோருக்கு அங்கீகார அட்டை தரப்படுவதில்லை.. அரசும் தருவதில்லை.. மாவட்ட நிருபர்களுக்கு அடையாள அட்டை உண்டே தவிர, தாலுகா ரிப்போர்ட்டர்களும் இதனால் பலன் பெற மாட்டார்கள். இதற்கு முன்பு இருந்த முதல்வர்கள் இந்த அளவுக்கு ஒரு அறிவிப்பினை செய்யவில்லை என்றாலும், எடப்பாடியாரின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியதே.
மருத்துவ செலவு
அதேபோல எல்லா பத்திரிகையாளர்களுமே மக்கள் பணியாற்றி கொண்டுதான் இருக்கிறார்கள்.. இவர்களது மருத்துவ செலவை ஏற்பதும் அரசின் கடமை.. இழப்பீடு தொகையான இந்த 5 லட்சம் என்பது அந்த குடும்பத்துக்கு குறைவுதான்.. காரணம், குடும்பத்தில் சம்பாதிக்க கூடிய ஒருவரே இறந்துவிடும்போது, அந்த குடும்பத்துக்கு 5 லட்சம் என்பது போதாது! இறப்பில்கூட ஒரு அரசு பாரபட்சம் பார்க்கக்கூடாது.. பாதிக்கப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு செலவில் மருத்துவம் அறிவிக்க வேண்டும், ஒருவேளை இழப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.. சின்ன பத்திரிகை, பெரிய பத்திரிகை என்ற பாகுபாடு பார்க்க கூடாது.
களப்பணி
களத்தில் பணியாற்றும் அனைத்து செய்தியாளர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.. பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும். மீடியா, பத்திரிகையாளர்களும் தங்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி கொள்ள வேண்டி நிர்ப்பந்தம் உள்ளது. சமூக ஓழுக்கத்தை உயர்த்தி பிடித்து - மனித மதிப்பீடுகளை பாதுகாத்து - மனித குலத்தை முன்னோக்கிசெல்லும் துடுப்பாக நம்மை கருதி கொள்ள வேண்டும்.. ஆளானப்பட்ட மருத்துவம் பார்த்த டாக்டர்களுக்கே இந்த நிலை என்றால் பத்திரிகையாளர்களுக்கு என்ன நிலைமை என்று யூகிக்ககூட நம்மால் முடியவில்லை.. கவனம் சகோதர சகோதரிகளே!!