கொரோனா போர்க்களத்தில் செய்தியாளர்கள்.. பரிசாக கிடைத்தது தொற்றுதான்.. அரசும், கட்சிகளும் உதவ கோரிக்கை
செய்தியாளர்களின் நலன் காக்க கோரிக்கை வலுத்து வருகிறது
சென்னை: "40 நாட்களாக சமூக பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு கிடைத்தது இலவச கொரோனா தொற்றுதான்.. வறுமையில் வாடுகிறார்கள் செய்தியாளர்கள்.. அரசின் நிதியும் யாருடைய வங்கி கணக்கிலும் வந்து சேரவில்லை.. செய்தியாளர்களின் நிலைமையை அனைத்து கட்சி தலைவர்களும் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
நடப்பில் உள்ள எல்லா வளர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும், வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாய் - ஆணிவேராய் திகழ்வது பத்திரிகைகளும் மீடியாக்களும்தான்!
உலகம் பயணித்து கொண்டிருக்கும் இந்த கடினமான நேரத்திலும் இவைகளின் பணி அளப்பரியது.. நோயிலிருந்து உயிர்க்காக்கும் மருத்துவர்களும், நோய் வராமல் தடுக்கும் தூய்மை பணியாளர்களும் உயர்த்தப்பட்ட அளவிற்கு செய்தியாளர்களை பல தரப்பினரும் மறந்தது ஏன் என்று தெரியவில்லை.
இந்த நேரத்தில் வேறு வழியும் இல்லை.. எல்லா செய்திகளையும் எல்லா தரப்புக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டி உள்ளது.. அன்றாட நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதை வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.. செல்லும் இடங்கள் எத்தகைய ஆபத்துக்கள் நிறைந்தவை, தொற்று எண்ணிக்கை என்ன, விளைவுகள் என்ன என்பதை பற்றி கிஞ்சித்தும் யோசிக்காமல் துணிந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் தொற்று அதிகம் என்பதால், செய்தியாளர்கள் சந்திப்பு என்பதை முற்றிலும் அரசு தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படவும் அது உடனடியாக பரிசீலிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு முதல்வர் செய்தியாளர் சந்திப்பில், "அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு தொற்று ஏற்பட்டால் மொத்த செலவையும் அரசே ஏற்கும்... அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்" என்றும் கூறியிருந்தார்.
கொரோனா.. தென் மாவட்டங்களிலுள்ள சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. கிராமங்களின் நிலை?
இந்நிலையில், அரசு செய்தியாளர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. இதற்கு காரணம் செய்தியாளர்கள் தொடந்து தொற்றால் பீடிக்கப்பட்டு வருவதுதான்.. இதுகுறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் "ஒன் இந்தியா தமிழுக்கு" அளித்த பேட்டியில் சொல்லும்போது, "தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை, மற்றும் நிதியுதவி வரவேற்கத்தக்கது.. அதற்காக முதல்வருக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறோம்.
எனினும் இழப்பீடு தொகையான இந்த 5 லட்சம் என்பது அந்த குடும்பத்துக்கு குறைவுதான்.. காரணம், குடும்பத்தில் சம்பாதிக்க கூடிய ஒருவரே இறந்துவிடும்போது, அந்த குடும்பத்துக்கு 5 லட்சம் என்பது போதாது.
பாதிக்கப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு செலவில் மருத்துவம் அறிவிக்க வேண்டும், ஒருவேளை இழப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.. சின்ன பத்திரிகை, பெரிய பத்திரிகை என்ற அரசு பாகுபாடு பார்க்க கூடாது. களத்தில் பணியாற்றும் அனைத்து செய்தியாளர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
கடந்த 40 நாட்களாக சமூக பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களில் பலருக்கு, இலவசமாக கொரோனா தொற்று மட்டுமே கிடைத்து உள்ளன. இந்த 40 நாட்களும் கடந்த நிலையில், ஒட்டுமொத்த செய்தியாளர்களும் மிகுந்த மன வேதனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்... இன்றுவரை அரசு குறிப்பிட்ட 3000 ரூபாய் கூட, யாருடைய வங்கி கணக்கிலும் வந்து சேரவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட, சிறிய பத்திரிகையாளர்கள், தாலுகா நிருபர்கள், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமாவது தற்போது கிடைக்கட்டும் என்று அமைதி காத்து வருகின்றனர்.. இந்த விஷயத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ ) உட்பட அனைத்து சங்கங்களும் இதில் ஒரே குடையின் கீழ் நிற்கிறது.
3000 ரூபாய் எல்லோருக்கும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் என்று தெரிந்தும் கூட உயிரை பற்றி கவலைப்படாமல் ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தியாளர்கள் களத்தில் தற்போதும் பணியாற்றி வருகிறார்கள். அதனால், தமிழகத்தில் உள்ள தாலுகா மற்றும் மாவட்ட செய்தியாளர்கள் அனைவருக்கும் மாவட்ட பிஆர்ஓ விடம் உள்ள பட்டியலை பெற்றுக் கொண்டு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைக்கிறோம்.
அதேபோல, மத்திய அரசின் மூலம் RNI பெற்று பத்திரிகைகளை முறையாக நடத்திவரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் குறைந்தபட்சம் 3000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும், இந்த விஷயத்தில் எதிர்கட்சி உட்பட மற்ற கட்சிகளும் உதவி செய்ய முன்வரலாம். காரணம் பத்திரிகையாளர்கள் அனைத்து கட்சிக்கும் பொதுவானவர்கள்தான்... எதிர்கட்சி உட்பட பலர் செய்த நலத்திட்டங்களையும் மக்கள் முன் கொண்டு சென்றவர்கள் நாங்கள்தான்... அதனால், அனைத்து கட்சிகளும், செய்தியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, தமிழக அரசுக்கு, எங்களுடைய வலியையும் வேதனைகளையும் எடுத்து சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.