தனிநபர் இடைவெளிக்கு பேராபத்து- வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை: கொரோனாவை தடுப்பதற்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் நடைமுறைக்கு பேராபத்தை ஏற்படுத்துவதால் வார இறுதி நாட்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 10-வது நாளாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனாலும் நாட்டின் பல பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் கூட்டமாக கூடுவது தொடர்கிறது. காய்கறி சந்தைகளில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமலேயே நெருக்கியடித்துக் கொண்டு பொதுமக்கள் நிற்கத்தான் செய்கின்றனர்.
அதுவும் கடந்த வாரம் வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் அலைமோதியது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த வீடுகளுக்குள் முடங்கி இருங்கள் என்ற அரசின் அறிவுறுத்தல் காற்றில் பறந்தது.
மேலும் 1 கிலோ ஆட்டுக்கறியின் விலை அதிகபட்சமாக ரூ1,250 வரையும் விற்பனையானது. சீண்டுவார் இல்லாமல் இருந்த கோழிக்கறியின் விலையும் பல மடங்கு கூடியது. 1 கிலோ மீனின் விலை குறைந்தபட்சம் ரூ200 என இருந்தது. இந்நிலையில் இந்த வார இறுதியில் இப்படியான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
ஆகையால் தமிழகத்தில் பல நகரங்களிலும் வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளன. மேலும் வார நாட்களில் வழக்கமான இடங்களில் அல்லாமல் தனியாக இறைச்சி கடைகளுக்கு என இடம் ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. இத்தகவல் தீயாக பரவியதால் பழைய இறைச்சி கடைகளிலும் புதியதாக இடம் மாற்றம் செய்யப்படும் இடங்களிலும் இன்றே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னையில் ஏப்.12 வரை மூடல்
சென்னை நகரில் நாளை முதல் ஏப்ரல் 12-ந் தேதி வரை இறைச்சி கடைகளை மூடுவதற்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி திறக்கப்படும் இறைச்சி கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.