தமிழகத்தில் லாக்டவுனை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவர் குழுவினர் பரிந்துரை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுனை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 14 பேர் கொண்ட மருத்துவ குழுவை அரசு அமைத்திருந்தது. இந்த மருத்துவர் குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டிக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், லாக்டவுனை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிகிறது. அத்துடன் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
அந்த கூட்டத்திலும் தமிழக மருத்துவர் குழுவினரின் பரிந்துரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என தெரிகிறது. ஏற்கனவே ஒடிஷாவில் ஏப்ரல் 30-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.