தமிழகத்தில் 673 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி - 6 பேர் மரணம்
தமிழகத்தில் இன்று புதிதாக 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து 821 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,28,287ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 821 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 9 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவில் இருந்து 1.25 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
தமிழகத்தில் தினசரியும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 673 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 28ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 422 பேர் ஆண்கள், 251 பேர் பெண்கள்.
இன்று 821 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 9ஆயிரத்து 392ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6,653ஆக குறைந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி... உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்... மத்திய அரசு விரிவான விளக்கம்
இன்று மட்டும் மொத்தம் 6பேர் உயிரிழந்துள்ளனர். 3பேர் தனியார் மருத்துவமனையிலும், 3பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,242 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 62,683பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 59லட்சத்து 8 ஆயிரத்து 259ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 249 பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னையில் இன்று 192 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 233 பேர் குணமடைந்த நிலையில் 2042 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 83 பேர் குணமடைந்துள்ளனர். 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டில் 55 பேரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 70 பேர் குணமடைந்த நிலையில் 388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழாக குறைந்துள்ளது.