400 ரூபாய் டெஸ்ட் கிட்.. 200 ரூபாய் ஜாஸ்தி தந்து.. எதுக்கு 600 ரூபாய்க்கு வாங்கனீங்க.. திருமா சுளீர்
ரேபிட் டெஸ்ட் கிட் அதிக விலை தந்து தமிழக அரசு வாங்கியது ஏன் என திருமாவளவன் கேட்டுள்ளார்
சென்னை: 400 ரூபாய்க்கு வாங்க வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு 200 ரூபாய் கூடுதலாக தந்து 600 ரூபாய்க்கு அதிமுக அரசு வாங்க வேண்டிய அவசியம் என்ன? இது எதனால் நடந்தது? என்பதை தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட அதே கேள்வியைதான் திருமாவளவனும் எழுப்பி உள்ளார்.. "ரூ.245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு, அதிமுக அரசு 600 ரூபாய் கொடுத்தது ஏன்?
ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெறாத ஒரு இடைத்தரகு நிறுவனத்திடம் அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆர்டர் வழங்க முதலமைச்சர் எப்படி அனுமதித்தார் என்பதே முக ஸ்டாலின் எழுப்பியிருந்த கேள்வி.
வாங்குன ரேபிட் டெஸ்ட் கருவிகளை அப்படியே சீனாவுக்கு திருப்பியனுப்புங்க.. ஐசிஎம்ஆர் அதிரடி
அறிக்கை
இதைதான் திருமாவளவனும் எழுப்பி உள்ளார்.. இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கை இதுதான்: "சீனாவிலிருந்து விரைவு பரிசோதனை கருவிகள் ( ரேபிட் டெஸ்ட் கிட்) வாங்கியதில் இடைத்தரகர்கள் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடைத்தரகர்கள்
5 லட்சம் கருவிகள் வாங்கியதில் சுமார் 18 கோடி ரூபாய் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர். சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 225 ரூபாய்க்கு வாங்கிய கருவியை 600 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளனர். இது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முன்கூட்டியே தெரியாதா? தெரிந்துதான் இந்த இடைத்தரகர்களிடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டதா? என்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கருவிகள்
சென்னையில் உள்ள மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனம் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை கருவி ஒன்று 225 ரூபாய் என்ற விலைக்குக் கொள்முதல் செய்துள்ளது. ஒரு கருவிக்கு 175 ரூபாய் கூடுதலாக வைத்து அதை 400 ரூபாய்க்கு ரியல் மெட்டபாலிக் மற்றும் ஆர்க் ஃபார்மசீயூடிகல்ஸ் ஆகிய கம்பெனிகளுக்கு விற்றுள்ளது. அந்த இரண்டு கம்பெனிகளும் ஐசிஎம்ஆர் நிறுவனத்துக்கு கருவி ஒன்று 600 ரூபாய் என்ற விலையில் விற்றுள்ளனர். அதாவது ஒவ்வொரு கருவிக்கும் 200 ரூபாய் என அவர்கள் கூடுதலாக விலை வைத்துள்ளனர். இப்படி ஐந்து லட்சம் கருவிகள் 30 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இதில் 18 கோடி ரூபாயை இடைத்தரகர்கள் அபகரித்துள்ளனர்.
ஒப்பந்தம்
இந்த ஐந்து லட்சம் கருவிகளில் 50,000 கருவிகள் தமிழக அரசால் வாங்கப்பட்டவையாகும். தமிழக அரசு சென்னையில் உள்ள ஷான் பயோடெக் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கருவி ஒன்று 600 ரூபாய் என்ற விலையில் வாங்கி இருக்கிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கருவி ஒன்றை 400 ரூபாய்க்கு விற்ற மேட்ரிக்ஸ் லேப்ஸ் நிறுவனமும் சென்னையில்தான் உள்ளது. தமிழக அரசு மேட்ரிக்ஸ் நிறுவனத்தோடு நேரடியாக ஒப்பந்தம் செய்து இருந்தால் குறைந்தபட்சம் கருவி ஒன்றை 400 ரூபாய்க்கு வாங்கியிருக்க முடியும்.
கொள்ளை லாபம்
ஆனால் ஷான் பயோடெக் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ததால் கருவி ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டியதாகியிருக்கிறது. இது எதனால் நடந்தது? என்பதை தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மக்களின் உயிர்காக்கும் கருவிகளை வாங்குகிற விஷயத்திலேயே இவ்வளவு கொள்ளை லாபம் ஈட்ட இந்த இடைத்தரகர்கள் முயற்சி செய்துள்ளனர். எனவே, மத்திய அரசு இந்த நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.
தடுக்கப்பட வேண்டும்
அதுமட்டுமின்றி மோசமான வணிக நடைமுறையைப் பின்பற்றிய இந்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் வைத்து குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் இத்தகைய கருவிகளை இறக்குமதி செய்வதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இனி இத்தகைய கருவிகளைக் கொள்முதல் செய்வதை ஐசிஎம்ஆர் பொறுப்பில் விடாமல், இதற்கென ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவே நேரடியாக அயல்நாடுகளில் இருந்து கருவிகளைத் தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தங்கள் யாவும் வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.