"திமுக பிரமுகர்"தான் செய்ய சொன்னார்.. முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் வாக்குமூலம்
முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்
கோவை: "கொரோனா வைரஸ் அமைச்சர் தங்கமணி சாயலில் இருக்கின்றது" எனவும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஆகியோர் குறித்தும் சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்பிய இளைஞரை கோவை போலீசார் கைது செய்தனர்.. "திமுக பிரமுகர்தான் இப்படி முதல்வரையும், அமைச்சர்களையும் மிரட்ட சொன்னார்" என்று இளைஞரின் வாக்குமூலத்தை வைத்து சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை கைது செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன!
கோவை மாவட்டம், கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான்... இவர் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இவர் திடீரென ஒரு புகார் தந்தார்.. அந்த புகாரில் "ஹலோ ஆப் எனும் செயலியில் "கருப்பு குதிரை" என்ற பெயரில் சில பதிவுகள் உள்ளன.
பதிவுகள்
அந்த பதிவுகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி குறித்து இழிவுபடுத்தி உள்ளது. இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுடன், அதிமுகவினரை மிரட்டும் விதமாகவும் இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். மேலும் "கொரோனா வைரஸ், அமைச்சர் தங்கமணி சாயலில் இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி" என்ற பதிவினை ஆதாரத்துடன் போலீசாருக்கு அளித்தார்.
பதிவுகள்
தமிழக ஆட்சியாளர்களின் பொறுமையை ஆத்திரமூட்டும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகள் போட்டுவரும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் ரியாஸ்கான் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபர் யார் என விசாரணையில் இறங்கினர்.
வெப் டிசைனர்
அப்போதுதான், சம்பந்தப்பட்டவர் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் பெயர் சுதர்சன் என்பதும் தெரியவந்தது. 22 வயதான இவர் ஒரு வெப் டிசைனர்.. இவர்தான் கருப்பு குதிரை என்ற பெயரில் இப்படி பதிவுகளை போட்டு வருபவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோவை தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று சுதர்சனை கைது செய்தனர்... விசாரணையும் மேற்கொண்டனர்.
கைது
அப்போது, திமுக பிரமுகர் ஒருவர் தனக்கு நண்பர் என்றும் அவர் சொன்னதால்தான், இப்படி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக பதிவுகள் செய்ததாகவும் சுதர்சன் தெரிவித்தார். இதனையடுத்து சுதர்சன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. தற்போது அந்த திமுக பிரமுகர் யார், அவரை கைது செய்வது குறித்த அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கோவை போலீசார் இறங்கி உள்ளனர்.. இதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளனர்!