ஒரு நாள் ஊரடங்கால்.. வைரஸை ஒழித்து விட முடியுமா.. நிச்சயம் முடியாது.. ஆனால் நிறைய நல்லது நடக்கும்!
மக்கள் ஊரடங்கு உத்தரவு ஏராளமான முக்கியத்துவத்தை பெறுகிறது
சென்னை: இந்த ஒருநாள் ஊரடங்கு உத்தரவில் கொரோனாவை ஒழித்துவிட முற்றிலுமாக முடியுமா? முடியாதுதான்.. அதேசமயம் பிரதமர் அறிவித்துள்ள இந்த மக்கள் ஊரடங்கு (ஜனதா கர்ஃபியூ) சில வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது... அவை என்ன என்வென்று பார்ப்போம்!
Recommended Video
இன்று ஒருநாள் ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்திருந்ததையொட்டி, அது பின்பற்றப்பட்டு வருகிறது... மக்களும் தங்கள் ஒத்துழைப்பையும் தந்து வருகின்றனர்.
ஆனால் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் வலம் வருகின்றன... ஏராளமான சந்தேகங்களும், குழப்பங்களும்கூட உலா வருகின்றன!
அறிவிப்பு
ஒருநாள் வீட்டில் உட்கார சொல்லிட்டாரே, வருமானம் பாதிக்காதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. ஆனால் பிரதமர் இந்த அறிவிப்பினை சொல்லும்போதே, உழைப்பாளர்களுக்கு ஊதியம் வழங்குவதைத் தவிர்க்கக்கூடாது என்றுதான் சொல்லி இருந்தார்.. அதே சமயம், தினக்கூலி செய்யும் ஏழைகள் நிச்சயம் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் நிதர்சனமே!
மாஸ்குகள்
அடுத்ததாக, மாஸ்க்குகள் தட்டுப்பாடாக உள்ளது, கிடைக்கும் மாஸ்க்குகளும் அதிக விலை சொல்கிறார்கள், இதற்கு ஏற்பாடு செய்யாமல் ஜன்னல் வழியாக கைகளை தட்டினால் சரியாகிவிடுமா என்றும் விமர்சனம் எழுந்தது.. கைகளை விடிந்ததும் தட்டசொல்லவில்லை பிரதமர்.. நோய் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிந்தும் தங்களையே அர்ப்பணித்து உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு சொல்லும் ஒரு சின்ன நன்றி.. அவ்வளவுதான்.. இந்த பாராட்டையும் விமர்சிப்பது அவ்வளவு உசிதம் இல்லை!
கொரோனா வைரஸ்
வெறும் 14 மணிநேர மக்கள் ஊரடங்கு உத்தரவினால் உலகையே உருட்டும் வைரஸை நம்மால் அழிக்கவே முடியாதுதான்.. உதாரணத்துக்கு கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளர் என்றே வைத்து கொள்வோம்.. 14 மணி நேர கால அவகாசத்திற்கு பிறகு இவர் நிச்சயம் இருமுவார்.. தும்முவார்.. அதன்மூலமும் வைரஸ் பரவலாம் என்பதும் உண்மைதான்!
அழியாது
இந்த 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கண்டிப்பாக கொரோனா பரவலை தடுக்காது, வைரஸையும் அழிக்காது.. ஆனால் ஓரளவுக்கு பரவலை கட்டுப்படுத்த உதவலாம். .. உண்மையில் ஒரு நாள் மட்டுமல்ல முடிந்தால் 2 வாரமாச்சும் ஊரடங்கு போட்டால் கூட நல்லதுதான். அதுதான் முழுமையான பலனையும் கொடுக்க உதவும். அரசாங்கம் சொல்லித்தான் நாம் தனிமையாக இருக்க வேண்டும் என்று இல்லை.. நாமாகவே வெளியில் செல்வதை அடியோடு குறைத்துக் கொண்டு வீட்டோடு இருந்தால் நல்லது. ஒட்டுமொத்த உலகமும் இந்த வைரஸை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் சூழலில் நாமும் இணைந்து இதற்கு ஒத்துழைப்பு தருவதுதான் சிறந்தது!!
விழிப்புணர்வு
இன்னொரு காரணம், வீடுகளுக்குள் மக்கள் இருப்பதால் தேவையற்ற பீதி ஏற்படாமல் தடுக்க முடியும்.. முக்கியமாக சோஷியல் மீடியாவில் வைரஸைவிட வேகமாக பரவிவரும் வதந்திகளை நம்பாமல், இந்த நோயை எப்படி எதிர்கொள்வது என்பதை குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசலாம்.. அதன்மூலம் ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு முதலில் நம் வீடுகளுக்குள்ளேயே கிடைக்கும், அடுத்தக்கட்ட முன்னெச்சரிக்கைக்கு நம்மை எப்படி தயார்படுத்தி கொள்ளலாம் என்பதற்கான முன்னோட்டமாககூட இந்த மக்கள் ஊரடங்கு அமையலாம்!
ஒத்துழைப்பு
எல்லா விழிப்புணர்வையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்று நாம் நினைத்து உட்கார்ந்துவிட கூடாது. எய்ட்ஸ் நோய் எப்படியோ கிட்டத்தட்ட அதுபோலதான் இந்த கொரோனாவும்... தனி மனிதனின் சுகாதாரம் ரொம்பவும் முக்கியம். ஒழுக்கம், பழக்கவழக்கம், கட்டுப்பாடுகளை ஒருவர் தகர்த்தெறியும்போது அது அந்த நபரை மட்டும் பாதிக்காமல், சுற்றியிருக்கும் சூழல், சமுதாயத்தையும் சேர்த்து பாதிக்கிறது.. இதை மனதில் வைத்தும்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... இதை ஒரேயடியாக ஒழிக்க முடியாது என்றாலும் "சோஷியல் டிஸ்டன்ஸ்" என்று பிரதமர் சொன்ன அந்த வார்த்தை, நிச்சயம் வைரஸ் பரவுவதை தடுக்க கை கொடுக்கும்!!