கொரோனாவின் மற்றொரு கோர முகம்.. மொத்த உலக பொருளாதாரமும் மோசமாக பாதிக்கப்போகிறது.. விழிக்குமா அரசு?
சென்னை: கொரோனா வைரஸின் சுகாதார, ஆரோக்கிய அபாயங்களை விட அதன் பேரழிவு வேறு ஒரு தளத்தில் அதிவேகமாக உள்ளது. அந்த ஆபத்து நீண்ட காலத்திற்கும் மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கும் வாய்ப்பு உள்ளது.
Recommended Video
ஆம்.. பொருளாதார ஆபத்து பொதுமக்களுக்கு காத்திருக்கிறது. அது உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கப்போகிறது. உலகின் ஒவ்வொரு மனிதனும், இதன் பாரத்தை சுமக்கப் போகிறான். இதை அச்சுறுத்த கூறவில்லை. ஆபத்தை உணர்ந்து, டாக்டர்களின் கைகளில் உள்ள பொறுப்பை, பொருளாதார நிபுணர்கள், மேதைகள் கையில் எடுக்க வேண்டிய காலகட்டம் இது என்பதற்காக சொல்கிறோம்.
நீங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பதன் மூலமாகவோ, உங்கள் நிறுவனம், உங்களை பணிநீக்கம் செய்ய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதற்கோ, நீங்கள் நடத்தும் தொழிலை திவாலாக்குவதோ, கொரோனா வைரஸ் காரணமாகக் கூடும்.. அதுதான், மனித சமூகத்தின் முன்பாக எழுந்துள்ள பேராபத்து.
வல்லரசு நாட்டுக்கே இந்த கதியா.. அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா.. எப்படி சமாளிக்கிறார்கள் தெரியுமா?
அரசியல் மாற்றங்கள்
அமெரிக்க டிரம்ப், அங்கு கொரோனா பரவும் நிலைமையைக் கையாள்வதில் தொடர்ந்து தடுமாறினால், அது மீண்டும் அவர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகளை கூட பெரிதாக பாதிக்கலாம். அதாவது மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கு இந்த கொரோனா காரணமாகப்போகிறது.
உலகளவில், கோவிட் -19 இதுவரை 4,389 பேரை பலிவாங்கியுள்ளது. ஆனால் இது பொருளாதார ரீதியாக, மில்லியன் கணக்கானவர்களை முடக்கிப் போடும். பங்குச் சந்தை வீழ்ச்சிகள், ரஷ்யாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான ஒரு எண்ணெய் யுத்தம் போன்ற அறிகுறிகளை உலகம் ஏற்கனவே பார்க்கத் தொடங்கிவிட்டது.
சீனாவின் பிரச்சினை அனைவரின் பிரச்சினை
குறிப்பாக சிறு வணிகங்களின், சப்ளை சங்கிலிகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. தயாரிப்புகள் அல்லது அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியே இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால், அந்த நாட்டின் வாங்கும் திறன் குறைந்துள்ளது.
வாங்கும் திறன் குறைந்துவிட்டால், உற்பத்தி அளவை இன்னும் குறைத்துவிடும். சீனா உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் மற்றும் உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கு பொறுப்பாளர். எனவே சீனாவின் பிரச்சினை என்பது நமது அனைவரின் பிரச்சினையாகும்.
அரசு கவனம்
இதுவரை கொரோனா வைரஸ் பிரச்சினையை, ஒரு பொருளாதார நெருக்கடியாக அன்றி, சுகாதார நெருக்கடியாக அரசாங்கங்கள் தொடர்ந்து பார்க்கின்றன என்பது இன்னும் கவலையளிக்கிறது. உண்மையான தொற்றுநோய் பொருளாதார சீரழிவுதான். அது, பரவுவதற்கு முன்பு, பொருளாதார வல்லுநர்கள் மருத்துவர்களிடமிருந்து பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது.
இத்தாலிக்கே இந்த கதி
இத்தாலி உலகின் ஒன்பதாவது பெரிய பொருளாதாரம். இப்போது பொருளாதார மந்தநிலையை நோக்கி போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இத்தாலியின் பாதிப்பு, ஐரோப்பாவையும் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான அமெரிக்காவையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
அரசு, வேகமாகவும் கடினமாகவும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இவை கொண்டு செல்லும்.
எண்ணை விலை
ரஷ்யா-சவுதி இடையே ஆயில் வர்த்தக போர் வெடித்தது. குறுகிய காலத்தில், அவ்விரு நாடுகளும், எண்ணெய் விலையில் 30 சதவீத விலை குறைப்பை கொண்டு வந்தன. ஆனால் அமெரிக்காவின் ஷேல் எரிவாயு வணிகத்தால் அது முடியாது. எண்ணெய் விலைகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்தால், அதோடு போட்டிபோட அமெரிக்காவின் ஷேல் எண்ணை உற்பத்தி ஆலைகளால் முடியாது. அமெரிக்க எண்ணெய் துறையின் பெரும்பகுதி நஷ்டமாகி, காலியாகிவிடும். இது பணியிழப்பு மற்றும் ஒருவேளை மாநில அளவிலான பொருளாதார மந்தநிலைகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியா நிலை
அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவின் பொருளாதார பாதிப்பு, இந்தியாவையும் பாதிக்கும். ஏற்கனவே, சிக்கன் விலை தாறுமாறாக குறைந்துள்ளது. மக்கள் ஹோட்டல்களில் சாப்பிட அச்சப்படுகிறார்கள். அந்த தொழிலும் நசிவடைந்துள்ளது. அத்துறைகளில் பணியாற்றுவோர் வேலை இழந்தால், அது மக்கள் மத்தியில், பணப் புழக்கத்தை குறைத்துவிடும். பொருளாதார மந்த நிலை மேலும் மோசமாகிவிடும். வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதில்லை, ரயில் பயணங்களை மேற்கொள்வதில்லை என்றால், இதையே நம்பியுள்ள தினக்கூலி தொழிலாளிகள் கதி என்ன ஆகும்? அவர்கள் குடும்பங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? வணிகர்கள் கதி என்ன ஆகும்? நிறுவனங்களின் நிலை என்னவாகும்? இதுதான், இப்போது அரசின் மற்றொரு அவசர பார்வையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.