அரசு வினியோகித்த கஜா புயல் நிவாரண பொருட்களில் மோசடி.. விசாரணை கேட்கிறார் தினகரன்
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக வெளிவந்த செய்தி குறித்து உரிய விசாரணை தேவை என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அழிவை சந்தித்தன. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்தன.
தமிழக அரசும் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது. 27 வகையான நிவாராண பொருட்களை அரசு வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந் நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக வெளிவந்த செய்தி குறித்து உரிய விசாரணை தேவை என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
கஜா புயலால் நிர்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனையோ உள்ளங்கள் உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.
தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்று பேட்டிகளை மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தது.
தற்போது, 27 வகையான நிவாராண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன தமிழக அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
அந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை என்றும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருந்தது கிடையாது. கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கும் மக்களுக்கு கொடுக்கக்கூடிய நிவாரண பொருட்களில் கூடவா இந்த அரசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்?
இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.