பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு... ஆன்லைனில் இன்று தொடங்கியது
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. இன்று முதல் 28ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது
மாணவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது உதவி மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான ரேண்டம் என் ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. ஜூன் 17ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜூன் 25 முதல் 28ம் தேதி வரை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கும் சென்னையில் நேரடி கலந்தாய்வு நடந்தது. இதனைத் தொடர்ந்து, பொது கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைனில் தொடங்கி உள்ளது. இந்த கலந்தாய்வில், ஒன்று முதல் 9, 872 வரை ரேங்க பெற்ற மாணவர்கள், வீட்டிலிருந்த படியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 மையங்களுக்குச் சென்றோ பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கல்லூரிகளில் சேருவதை மாணவர்கள் ஜூலை 12ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிபடுத்த வேண்டும். ஜூலை 13ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரி தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் தகுதி பெறுவார்கள். ஜூலை 28ம் தேதிக்குள் 4 சுற்றுக்களாக கலந்தாய்வு நடத்தி முடிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.