நியாயப்படி வாக்கு எண்ணிக்கை நடக்கிறதா? அறிக்கை தேவை.. இரவோடு ஹைகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை: விதிகளை பின்பற்றியே, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக நாளை, தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வழக்கை இன்று இரவு அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் இவ்வாறு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருப்பதாகவும், ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாகவும் அந்த புகாரில், ஸ்டாலின் ்கூறினார். அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காதததால், நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறினார்.
அதன்படி, திமுக சார்பில், ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை அவசர வழக்காக இரவோடு இரவாக விசாரித்தது உயர்நீதிமன்றம்.
நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி.. தென்கோடி குமரி மாவட்டத்தில் அசத்திய சுனில்
இன்று இரவு சுமார் 10.45 மணி அளவில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், விதிகளை பின்பற்றியே, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
எங்கெல்லாம் போலீசார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்களோ அதையெல்லாம் வீடியோவாக எடுத்து தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும்படியும், சட்டப்படி தவறு என்பதால் நீதிமன்றத்தின் மூலமாக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது ஆர்.எஸ்.பாரதி, எச்சரித்தார்.