கணவன் மனைவி இடையே பயங்கர சண்டை.. தீக்குளிக்க முயன்ற மனைவி.. தானும் தீ வைத்த கணவர்.. இருவரும் பலி!
சென்னை அருகே தீக்குளித்த கணவன், மனைவி உயிரிழந்தனர்
சென்னை: கணவன், மனைவிக்கு ரெண்டு பேருக்குமே பயங்கரமான சண்டை.. இதனால் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே கணவன், அந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தன் மீது ஊற்றிக் கொண்டு தீயை பற்ற வைக்க.. கடைசியில் 2 பேருமே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்க்காரனை காமராஜர் நகரை சேர்ந்தவர் அய்யனார். திருசூலத்தை சேர்ந்த இவர் லாரி டிரைவராக வேலை பார்த்தவர்.
இவருக்கு கல்யாணம் ஆகி முதல் மனைவியை பிரிந்தவர். முறைப்படி விவாகரத்தும் பெற்றவர். அதனால் கிருஷ்ணம்மாள் என்ற 24 வயது பெண்ணை 2-வதாக 6 மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் செய்து கொண்டார்.
சண்டை
அந்த பகுதிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அய்யனாருக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. தினமும் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததால் கிருஷ்ணம்மாள் கணவனிடம் சண்டை போடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
மண்ணெண்ணெய்
அப்படித்தான் நேற்றிரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு குடிபோதையில் வந்த அய்யனாரை பார்த்ததும் கிருஷ்ணம்மாளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அதனால் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றியுள்ளார் இதை பார்த்த அய்யனார், அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தன் மீது ஊற்றிகொண்டு தீயை பற்ற வைத்தார்.
அலறினார்
இதனை கண்ட கிருஷ்ணம்மாள் ஓடி வந்து அதை அணைக்க முயன்றார். அப்போது அவர்மீதும் தீப்பிடித்தது. இதனால் இருவருமே தீயில் எரிந்து அலறினார்கள். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பீர்கன்காரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர்.
விசாரணை
விரைந்து வந்த அவர்கள், இருவரையும் தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று காலை இருவருமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கணவன்-மனைவி இருவருமே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.