'ரூட் தல' விவகாரம்.. ஸ்பாட்டிலேயே இல்லை.. கைதான மாணவனுக்கு ஜாமீன் வழங்கியது கோர்ட்
கைதான மாணவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது
Recommended Video
சென்னை: 'ரூட் தல' பிரச்னையில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவன், சம்பவம் நடந்தபோது பெரியபாளையத்தில் இருந்ததாக நிரூபிக்கப்பட்டதையடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 23-ம் தேதி மதியம் 2 மணியளவில் அரும்பாக்கம் அருகே பஸ்ஸில் போய் கொண்டிருந்த பச்சையப்பன் காலேஜ் மாணவர்களுக்கு இடையே ரூட் தல விவகாரம் வெடித்தது. அப்போது இரு தரப்பினரும் அரிவாள், பட்டாக்கத்தியுடன் மோதி கொண்டனர்.
நடுரோட்டிலேயே ஒருத்தரை ஒருத்தர் தாக்கி கொண்டதுன், அரிவாளாலும் ஓட ஓட வெட்டினர். இதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த வீடியோ வெளியாகி தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த மோதல் தொடர்பாக மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் சென்னை, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில், 4 மாணவரில் ஒருவரான மதன் என்பவர் தரப்பில் ஆஜரான வக்கீல், "சம்பவம் நடந்தபோது, மாணவன் அங்கே இல்லை, பெரியபாளையத்தில் இருந்தார். சம்பந்தமே இல்லாமல் மாணவனை கைது செய்துள்ளனர்" என்றுகூறி அதற்கான சிசிடிவி ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
இதற்கு பதிலளித்த போலீசார், "இந்த சம்பவத்தில் இல்லையென்றாலும், இதுக்கு முன்னாடிபஸ் டே கொண்டாட்டத்தின்போது, இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தார். அதனால்தான் கைது செய்தோம்" என்றார். இறுதியில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவன் மதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதை பற்றி மாணவன் மதனின் தாய் சொல்லும்போது, "என் பையனுக்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்தது. அதனால 2 மாசமா காலேஜ்க்கே போகவில்லை. அந்த சம்பவம் நடந்தபோது, என் பையன் பெரியபாளையம் ஸ்டாண்டில் இருந்தார். இதுக்கான எல்லா ஆதாரத்தையும் கோர்ட்ல சமர்ப்பித்து ஜாமீன் வாங்கிட்டோம். ஆனாலும், பொய் வாக்கு போட்டு என் மகனை போலீஸ் அடிச்சிருக்காங்க. இது சம்பந்தமாக மனித உரிமை ஆணையத்தில் கேஸ் தொடர்ந்துள்ளோம்" என்றார்.