கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கு... திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகிய இருவரும் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் கு.க.செல்வம் கடந்த மாதம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லிக்கு சென்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். திமுக தலைமைக்கு தகவல் அளிக்காமல் அவர் இந்த சந்திப்பை நடத்தியதோடு முடிந்தால் தன்னை கட்சியை விட்டு நீக்கட்டும் என சவால் விடுத்தார்.
மேலும், ராகுல்காந்தியுடன் கூட்டணி வைப்பதை திமுக தலைமை நிறுத்த வேண்டும் என்றும் தனது தொகுதியில் லிப்ட் அமைப்பதற்காகவே டெல்லிக்கு வந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதாகவும் புதுமையான விளக்கத்தை அளித்தார் கு.க.செல்வம். இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், அவர் அளித்த பதில் ஏற்கும்படி இல்லை எனக் கூறி கட்சியிலிருந்து கட்டம் கட்டினார்.
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு... அவல் அள்ளி போடவேண்டாம்... ஸ்டாலின் கடிதம்
இதையடுத்து திமுக சட்டதிட்ட விதிகள் படி பொதுச்செயலாளருக்கு தான் ஒருவரை கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இருப்பதாகவும் அப்படியிருக்க தன்னை ஸ்டாலின் நீக்கியது செல்லாது எனக் கூறியும் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் புகார் மீது வரும் 18-ம் தேதிக்குள் திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதிலளிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.