தமிழக இந்து சமய அறநிலையத்துறை... சீல் வைத்த பள்ளி... நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை சீல் வைத்த பள்ளி, தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமாக, தற்போது சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 46 கிரவுண்ட் மற்றும் ஆயிரத்து 600 சதுர அடி நிலத்தை 99 ஆண்டு குத்தகையில் தர்மமூர்த்தி ராவ்பகதூர் என்பவர் நிறுவிய தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளைக்கு 1900ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.
அந்த நிலத்தை கல்வி பயன்பாட்டிற்காக முடிவெடுத்து, 1969ஆம் ஆண்டில் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தது. மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில் ஏறத்தாழ ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், குத்தகைக்கான ஆண்டு தொகையை கொடுக்க முடியாததால் 12.5 கிரவுண்ட் நிலம் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலும் சில கிரவுண்ட் நிலத்தை வழங்கவும் அறக்கட்டளை தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.
2013ஆம் ஆண்டு முதல் 2019 வரை மாதம் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரமும், அதன் பின்னர் ஜூன் 2020 வரை ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இதுதவிர இரண்டரை கோடி ரூபாயையும் அறக்கட்டளை செலுத்திய நிலையில், நிலுவைத்தொகை மற்றும் வட்டியை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு... தடுப்பு மருந்து... மனித பரிசோதனை... தொடக்கம்!!
இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி பள்ளி வளாகத்திற்கு வந்த அறநிலையத்துறையினர் பள்ளி வளாகத்திற்கு சீல் வைத்து சென்றுள்ளனர். ஆயிரம் மாணவ மாணவியர் படிக்கும் கீழ்ப்பாக்கம் சீதா கிங்ஸ்டன் பள்ளிக்கு சீல் வைத்ததால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தில் மாணவர்களின் பெற்றோர்களான டி.ஜெரினா, கே.காயத்ரி, எம்.ஆர்.பரகத்நிஷா, பி.எம்.ஜெயலட்சுமி, ஏ.ராமசந்திரன், கே.மனோஜ்குமார், ஏ.ராமதூதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் மனுவில், அறநிலையத்துறை உதவி ஆணையர் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து ஜூலை 6ஆம் தேதி மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கும், கோவில் செயல் அலுவலருக்கும் நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் மாணவர்களின் நலனை காக்கும் நோக்கில் மெட்ரிக் பள்ளி இயக்குனர் செயல்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவர்களின் நிலை கருதி மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதற்கு தேவைப்படும் குறைந்தபட்சம் 6 கிரவுண்ட் நிலத்தை எடுப்பதற்கு கூட மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும், பள்ளி இயங்கும் கட்டிடத்திற்கு சீல் வைப்பதற்கு முன்பாக பெற்றோர்களிடம் அறநிலையத்துறை முறையாக தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே சீதா கிங்ஸ்டன் பள்ளி செயல்படுவதற்கு தேவையான 6 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத்துறையிடமிருந்து பெற்று, பள்ளி தொடர்ந்து செயல்படுவதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரும், இந்துசமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.