நாட்டு மக்களை காக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது.. கபில் சிபல் பேச்சு
சென்னை: நாட்டு குடிமக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் தெரிவித்தார். அரசு அதிகாரம் மக்களை துன்புறுத்தும் போது நீதிமன்றம் அதில் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ரவீந்தரன், ஏற்பாட்டின் பேரில், இன்று (சனிக்கிழமை) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதித்துறை சார்ந்த கருந்தரங்கு நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர்கள் பலரும், மூத்த பத்திரிக்கையாளர்களும் பங்கேற்றனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்தான் நீதிபதி என்று அழைக்கப்படுபவர். புகார்தாரர் மற்றும் எதிர்தரப்பு ஆகிய இருவருக்கும் இடையே சமமாக செயல்பட வேண்டிய பொறுப்பில் இருப்பவர் நீதிபதி. சில நேரங்களில் நீதிபதி சட்டத்தை மட்டும் பார்ப்பார். நீதிபதிகள் அதையும் தாண்டி சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
நீதிபதிகளின் அடிப்படை தகுதி என்பது வாதங்களை பொறுமையாக கேட்டுக் கொள்வதுதான். சில நேரங்களில் நீதிபதிகள் அதிகமாக பேச முற்படுகிறார்கள். ஆனால், ஒரு சிறப்பான நீதிபதி என்பவர் எப்போதுமே கேட்பதில் விருப்பம் உடையவராக இருக்கிறார். நாட்டு குடிமக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. அரசு அதிகாரம் மக்களை துன்புறுத்தும் போது நீதிமன்றம் அதில் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நீதிபதி பணி நியமனங்களில் நிர்வாகத் தலையீடுகள் அதிகமாக இருக்கின்றன. பல தலைமை நீதிபதிகள் பணிக்கு வரும்போதே, தங்களுக்கான விருப்பங்களையும் கூடவே கொண்டு வருகிறார்கள். நீதித்துறையில், தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே கொண்டுவருவதற்கான லாபி நடக்கிறது. தாங்கள் விரும்பக்கூடிய நபர்களை நீதிபதியாக நியமிக்கும்போது, இவர்கள் மூத்த நீதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து இதுபோன்ற நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் இடையே சில உரசல்கள் காணப்பட்டன. தலைமை நீதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது, ஆனால் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் சிஸ்டம் சரியாக செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. உயர் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்தில் இதுபோன்ற முணுமுணுப்புகள் எழுகின்றன. இது எனக்கு கவலை அளிக்கிறது. நீதித் துறையில் பணியிடங்கள் நிறைய காலியாக இருக்கின்றன. விசாரணை நீதிமன்றங்களாக இருக்கட்டும் அல்லது உயர்நீதிமன்றங்களாக இருக்கட்டும், நீதிபதிகளின் பதவி இடங்கள் காலியாக இருப்பதால் பொதுமக்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது.
நீதி கேட்டு வரும் மக்களுக்கு, உரிய காலத்தில் அது கிடைக்காவிட்டால், நீதி எப்படி நிலைநாட்டப்படும். எனவே, நீதி துறைக்கு நிதிச் சுதந்திரம் தேவைப்படுகிறது. தன்னாட்சி கொண்ட நிதி அமைப்பு அவசியப்படுகிறது.
இதற்கு அரசியல் சாசன திருத்தம் அவசியமாகிறது. பெருமளவுக்கு நீதிமன்றங்கள் நேர்மை கொண்ட நீதிபதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடிய ஒரு அமர்வில் ஒரு முன்னாள் தலைமை நீதிபதி விசாரணைக்காக அமர்ந்ததை நாம் பார்த்துள்ளோம். அந்த நீதிபதிகள் அமர்வில் அவரும் இடம்பெற்றதுடன் வழக்கு பற்றிய அதில் ஒரு உரையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு இப்படி நடந்ததே கிடையாது.
சில நேரங்களில் நீதி தடம் புரளும்போது அதை சுட்டிக்காட்ட போதிய தைரியசாலிகள் இல்லை. நான் குறிப்பிட்ட இந்த விஷயம் பொதுமக்கள் மனதிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோல நடந்து இருக்க கூடாது என்று அவர்கள் கருதுகிறார்கள். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, தலைமை நீதிபதி அதில் கையெழுத்திடவில்லை. அந்த அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள்தான் கையெழுத்திட்டனர்.
தலைமை நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும், அரசியல் காரணங்களால் அது முடக்கப்படுவது அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவதுதான் நடக்கிறது. இந்த விஷயத்தில் பார் கவுன்சில்கள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசியலின் அடிப்படையில் பார் கவுன்சில்கள் பிரிந்து கிடக்கின்றன. ஒரு வழக்கறிஞர்களாக நாம் சட்டத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வேறு எதையும் கிடையாது.
பார் கவுன்சில்கள் சிறப்பாக செயல்பட்டால்தான், ஜனநாயகம் காக்கப்படும். எனது கருத்துப்படி, பார் கவுன்சில்கள் மொத்தமாக தோல்வியடைந்து விட்டன என்று நான் கூறுவேன். நீதித்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்பதற்கு சில காரணங்களை என்னால் கூற முடியும். சில முக்கிய வழக்குகள் பட்டியலிடப்படுவதில்லை. முக்கியமற்ற வழக்குகள் பட்டியலிடப்படுகின்றன. கடுமையான தீர்ப்புகளை வழங்கக்கூடிய நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். உத்தரகாண்டில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த நீதிபதிகள் தங்கள் சீனியாரிட்டியை இழக்கும் நிலைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இவ்வாறு கபில்சிபல் தெரிவித்தார்.