கொரோனாவை தடுக்க தமிழகம் முழுக்க 703 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் - தீவிர கண்காணிப்பு
தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் நோய் பரவலைத்தடுக்க மாநிலம் முழுவதும் 703 மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள காரணத்தால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் விபரங்களை அரசு வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 703 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 104 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள், எந்தெந்த மாவட்டங்களில் அதிகமான மண்டலங்கள் உள்ளன என்பது குறித்த முழு விபரங்களை அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளது
மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 37331 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து மீண்டு இன்று 2212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தமாக 47749 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும் நோய் பரவல் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் 703 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளை முழுமையாக கட்டுப்படுத்தி அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு அறிகுறி உள்ள அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தபடுவர். அங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊராடங்கு நாளையுடன் முடிவடைகிறது. ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மருத்துவக்குழுவினர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள், கொரோனாவை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். 80 சதவீத நபர்களுக்கு லேசான அறிகுறியே உள்ளது. திருச்சி, மதுரை, திருவண்ணாலை மாவட்டங்களில் பரிசோதனை அதிகரிக்க முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளோம். தற்போது நாள் ஒன்றுக்கு 30,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்தனர். லாக் டவுன் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்தாது என்றும் லாக்டவுன் மட்டுமே தீர்வாகாது என்றும் லாக்டவுனை நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்றும் கூறினர்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட்டை விமர்சித்த புகார்- தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பியை டிரான்ஸ்பர் செய்ய அதிரடி உத்தரவு
கடந்த 9 ஆம் தேதி தமிழகத்தில் 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 104 பகுதிகளும், சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64 பகுதிகள், மதுரையில் 57 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. அதே நேரத்தில் நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை எனவும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.