சென்னையில் எந்த ஏரியாவில் கொரோனா அதிகம்.. மண்டல வாரியாக விவரம்
சென்னை: சென்னையில் இதுவரை 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இப்போது பார்ப்போம்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக சென்னையில் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. பாதிக்கப்பட்ட 110 பேரில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அண்ணாநகர் 2வது இடம்
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் ராயுபரம், புதுப்பேட்டை, பிராட்வே பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அண்ணாநகர் மண்டலத்தில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அண்ணா நகர் அமைந்தகரை மற்றும் புரசைவாக்கத்தில் அதிகம் பேர் உள்ளனர்.
திருவிக நகர் 14
கோடம்பாக்கம் மண்டலத்தில் 12பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த மண்டலத்தில் சைதாப்பேட்டை மாம்பலம் பகுதிகள் கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதியாகும்.திருவிக நகர் மண்டலத்தில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதியாகும்.
தண்டையார் பேட்டை 7
தேனாம்பேட்டை மண்டலத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சாந்தோம், திருவல்லிக்கேணி பகுதிகள் கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதியாகும்.
தண்டையார் பேட்டை மண்டலத்தில் 7 பேருக்கும், வளசரவாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் தலா 4 பேருக்கும் மாதவரம் மண்டலத்தில் 4 பேருக்கும் அடையாறு மற்றும் திருவெற்றியூர் மண்டலத்தில் தலா 3 பேருக்கும், சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் தலா 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடுமையான சோதனை
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் வசித்த மொத்தம் 40 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வசித்த இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு சோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள். சென்னையில் கடந்த சில நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று போலீசார் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி வருகிறார்கள்.