ஊரடங்கு அச்சத்தால் வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள் - சென்னை, கோவை ரயில் நிலையங்களில் குவிந்தனர்
தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதால் சொந்த ஊர் செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அலை மோதி வருகின்றனர். கோவையிலும் வட மாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்ற
சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் தமிழகத்திலிருந்து வடமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். நாளை முதல் நள்ளிரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். இதே போல கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் ரயில்களில் டிக்கெட் பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.
கடந்த முறை கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அத்துடன் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளர்கள் உணவு, இருப்பிடம் இன்றி தவித்ததுடன், தனது சொந்த பந்தங்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர்.
டெல்லியில் இருந்து பல கிலோமீட்டர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சிலர் சென்றடைந்தனர். இதில் பல உயிரிழப்புகளும் நேர்ந்தது. இதை கருத்தில் கொண்டு முன்னதாகவே சொந்த ஊர் செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அலை மோதி வருகின்றனர்.
பாட்னா ,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வட மாநிலத்தினர் இன்று இரவு 7 மணிக்கு ரயிலில் செல்ல முன்பதிவு மற்றும் தக்கலில் செல்லவும் முடிவெடுத்து காத்திருக்கின்றனர். இதே போல கோவை, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அப்போது தனியார் பொது போக்குவரத்து ,வாடகை ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - என்ன சொல்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கு போது செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களில் இரவு காவல் புரிபவர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் மூலம் வீட்டிலிருந்து பணியிடத்தில் சென்று வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் முழு நேர லாக்டவுன் திடீரென அறிவிக்கப்பட்டால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாது என்று நினைத்து இன்று முதலே வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.