தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: கட்டுப்பாடுகள் அமலானதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கித்தவித்து வருகிறது தமிழகம். ஒரே நாளில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் ஊரடங்கு அமலாகிறது. 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இரவு நேரங்களில் தனியார், பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு அனுமதி இல்லை. இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. அவசர மருத்துவ தேவை, விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா ஊரடங்கு? ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில்... குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இரவு நேரங்களில் யாருக்கு அனுமதி
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மருந்தகம், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் ஆகியவையும் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊடகப்பணிகளுக்கு அனுமதி
அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்
அனைத்து நாட்களிலும் மாநிலத்திலுள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் வெறிச்சோடின.
9 மணிக்கு மேல் ஊரடங்கு
தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள், நகை மற்றும் ஜவுளி கடைகள் ஆகியவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது
புதிதாக திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடத்த தடை உள்ளது. மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கு
ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. அதேநேரம் அத்தியாவசிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கு எவ்வித தடைகளும் அறிவிக்கப்படவில்லை.
யாருக்கு அனுமதி இல்லை
முழு ஊரடங்கு நாளில் உணவகங்கள் காலை 6-10, பகல் 12 -3, மாலை 6 - 9 வரை பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி இல்லை.
100 பேருக்கு அனுமதி
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண நிகழ்வுகளில் 100 பேர், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளன.