ஊடரங்கால் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள்.. சென்னை உள்பட முக்கிய நகரங்களின் நிலை!
சென்னை :கொரோனா காரணமாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படுகிறது.
கொரோனா மற்றும் இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக டெல்லி அரசு, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
இரவு ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 இரவு 11 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரையும், ஜனவரி 1 ஆம் தேதி இரவு 11 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் விதிக்கப்படும் என்று டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் நேற்று கூறியிருந்தார். எனினும் சரக்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.
மும்பையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள், பார்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். குறிப்பாக எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு பகுதிகளில் விடிய, விடிய பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை(புத்தாண்டு அன்று) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகரில் உள்ள பகுதிகள் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத மண்டலக்களாக்கப்பட்டுள்ளது. விடுதிகள், பார்கள், உணவகங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்
வரலாற்றில் முதல்முறை... புத்தாண்டில் மக்கள் இல்லாத மெரினா கடற்கரை.. மூடப்பட்ட சாலைகள்!
இதேபோல் சென்னையிலும் இரவு 10 மணிக்கு மேல் அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள், பார்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டது. அதன்படி மூடப்பட்டுள்ளது. போலீசாரின் தடை உத்தரவை மீறி யாரேனும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தால் சம்பந்தபட்ட ஓட்டல் மற்றும் ரிசார்கள் உரிமம் ரத்து செய்ய அனைத்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபால், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூட முற்றுலும் தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுளளது.. இதற்காக காவல் துறை சார்பில் கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளும் வைத்துள்ளனர். தடையை மீறி கடற்கரைக்கு வரும் பொதுமக்களை கண்காணிக்க குதிரைப்படை, ஆயுதப்படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். சாலைகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடவும் தடை விதித்துள்ளார்கள்.
புத்தாண்டு வழிபாடு நடத்துவதற்கு காவல் துறை சில நிபந்தனைகள் விதித்துள்ளது. இரவு 12 மணிக்கு முதல் 5 மணி வரை தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 மணிக்கு மேல் முறையான காவல் துறை அனுமதியுடன் நிர்ணயிக்கப்பட்ட நபர்களுடன் உரிய பாதுகாப்புடன் வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது