கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்
கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு உடனடியாக ரூ.3000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின் தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது என்று கூறிய முதல்வர் பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவைப்படுகிறது அதனை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ. 1000 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.