சென்னையில் 350 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு வார்டு ரெடி.. பல்நோக்கு மருத்துவமனையில் அதிரடி மாற்றம்
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளை வெளியேற்றி கொரோனா சிறப்பு வார்டுகளை தமிழக சுகாதாரத்துறை உருவாக்க முடிவு செய்துள்ளது.
Recommended Video
முதற்கட்டமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளிகளை வெளியேற்றிவிட்டு 350 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. இதில் 46 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உள்நோயாளிகள் வெளியேற்றம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனஅச்சம் நிலவுவதால், முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளை வெளியேற்றி கொரோனா சிறப்பு வார்டுகளை தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது.
பன்மடங்கு அதிகரிப்பு
இதன்படி முதல்கட்டமாக சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு வார்டுகள் அமைக்கப்படுகிறது. படுக்கைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 5 மடங்கு அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அரசு மருத்துவமனைகள்
தற்போது தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ள காரணத்தால் கொரோனா சிறப்பு வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுகிறது. சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு வார்டு
இந்நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் 350 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.. இதற்காக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனைத்து உள்நோயாளிகளும் வெளியேற்றப்பட்டனர். இதேபோல அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளை வெளியேற்றிவிட்டு சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை கொரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது அவற்றின் விவரம். 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477.