2 நாளில் நம்பிக்கை அளித்த மாற்றங்கள்.. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாததுக்கு இதுவே காரணம்!
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக குறைந்து வருகிறது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை, இதனால் கொரோனாவில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்தது. இதற்கு காரணம் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தினமும் பாசிட்டிவ் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதன் விளைவாக இன்று 1242 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைவாகவே உள்ளது. நேற்று 31 பேருக்கும், இன்று 38 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் விளக்கம்
அதேநேரம் தமிழகத்தில் சமூக பரவலாக கொரோனா வைரஸ் தொற்று மாறவில்லை என்பதை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.. பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அளவிலேயே கொரோனா பரவி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் குறைந்த அளவிலேயே பரவி உள்ளது. அதையும் தமிழக அரசு வேகமாக கட்டுப்படுத்தி உள்ளது.
17835 பேருக்கு பரிசோதனை
எனவே வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து விரைவில் பூஜியம் நிலையை எட்டும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. இன்னாரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனா வைரஸ் பரிசோதனைகளும் தமிழகத்தில் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 17835 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. 2739 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்று செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் பேசும் போது 26 பரிசோதனை மையங்கள் இருப்பதாகவும், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அளவு என்றும் கூறியுள்ளார். அத்துடன் ஒரு நாளில் 5320 பேரை ஒரு நாளைக்கு நம்மால் (தமிழகத்தில்) சோதிக்க முடியும் என்றும் வரும் நாட்களில் சோதனை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மருந்துகள் உள்ளது
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் 3லேயர் மாஸ்க், என்95 மாஸ்க், மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு உள்ளது. 2லட்சம் 3பிலேயர் மாஸ்க் சப்ளை உள்ளது. 20 ஆயிரம் என்95 மாஸ்க் கொடுத்து வருகிறோம். தேவையான நிதி உதவிகளை அரசு கொடுத்துள்ளது. தற்போது ஒன்றைரை லட்சம் நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு தமிழக அரசின் கைவசம் மருந்து உள்ளது என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.
மே 3க்குள் சரியாகும்
இப்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் எந்த பகுதியிலும் சமூக பரவலாக மாறவில்லை இதற்கு காரணம் ஊரங்கு உத்தரவு மற்றும் சமூக விலகல் ஆகும். மக்கள் சமூக விலகலை தொடர்ந்து கடைபிடித்தால் அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி காலத்திற்குள் தமிழகம் கொரோனாவை முழுயைமாக கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நம்பிக்கைகளை கடந்த இரண்டு நாட்கள் ஏற்படுத்தி உள்ளன.
மக்கள் ஒத்துழைப்பு
தற்போதைய நிலையில் ஊரடங்கு மற்றும் வீடு வீடாக நடத்தப்பட்ட பரிசாதனைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் சமூக தொற்றுகள் ஏற்படாத வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே சமூகத்தை பாதுகாக்க தொடர்ந்து முழு மூச்சோடு அனைவரும் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். அதேபோல தமிழக அரசும் டெஸ்ட்டுகளை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே பாதிப்புகளை வேகமாக குறைக்க இது உதவும்.
கொரோனா இல்லா மாவட்டம்
தற்போதைய நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. விரைவில் பல மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் என்று நம்பலாம். பாசிட்டிவ்வான மாற்றங்கள் இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.