தயக்கம், குழப்பம்.. கொரோனா தடுப்பூசி பெறுவோர் தமிழகத்தில் ரொம்ப கம்மி.. நாட்டிலேயே கர்நாடகா டாப்!
சென்னை: நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே அதிக ஆர்வம் இல்லை என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனவரி 16ம் தேதி கடந்த சனிக்கிழமை முதல், நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்புடன் கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஊசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் இரு நிறுவனங்களின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
இருவகை தடுப்பூசி
அதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. முதல் முறையாக இந்தியாவில் இந்த தடுப்பூசி போடப்படுவதால் மக்களிடையே ஒருவித தயக்கம் இருக்கிறது. உதாரணத்துக்கு கடந்த சனிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 ஆயிரத்து 319 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த எண்ணிக்கை திங்கள்கிழமையான நேற்று 3593 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
பாதி பேருக்கு ஊசி
ஒவ்வொரு செஷனுக்கும் சராசரியாக 100 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று தேசிய அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சராசரியாக 50 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுகாதார பணியாளர்களுக்கு தன்முதலில் தடுப்பூசி போடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் கணிசமானோர் தங்கள் பெயரை பதிவு செய்யாமல் தவிர்த்து வருகிறார்கள்.
கர்நாடகாவில் அதிகம் பேருக்கு தடுப்பூசி
நாட்டிலேயே இதுவரை கர்நாடகாவில்தான் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு 54 ஆயிரத்து 196 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெறும் 16,412 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 46 ஆயிரத்து 755 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 46 ஆயிரத்து 272 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகம்தான் ரொம்ப கம்மி
தமிழகத்தை விட சிறிய மாநிலங்களான கேரளாவில் 19 ஆயிரத்து 913 பேர் மற்றும் ஹரியானாவில் 17 ஆயிரத்து 364 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இது தமிழகத்தை விட அதிக எண்ணிக்கையில் ஆனது ஆகும்.
விழிப்புணர்வு
"ஆரம்பத்தில், சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெற மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் பின்னர், விழிப்புணர்வு இல்லாததன் காரணமாகவும், சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவதன் காரணமாகவும், லோசான பக்க விளைவுகளை மிகைப் படுத்தியதாலும், இப்போது, சுகாதாரப் பணியாளர்களிடையே மட்டுமல்ல, பொது மக்களிடமும் மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது " என்கிறார், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குனர் ரன்தீப் குலேரியா. முதல் நாளிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்ட முக்கிய நபர்களில் இவரும் ஒருவராகும்.