முதியவர்களுக்கும்.. இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி.. பதிவு ஸ்டார்ட்
சென்னை: முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடு முழுக்க இன்று துவங்கியுள்ளது.
Cowin செயலியில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு ஆரம்பித்தது.
முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 28 நாட்கள் இடைவெளியில், மொத்தம் 2 டோஸ் போட வேண்டியது அவசியம். அப்போதுதான் மருந்து முழுமையாக வேலை செய்யும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
தடுப்பூசி பதிவு
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் 2வது கட்ட பணிகள் இன்று துவங்கியுள்ளன. இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 - 59 வயதுக்கு உட்பட்டவர்களுள் நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசிக்காக தங்கள் பெயரை cowin 2.0 இணையதளம், அல்லது ஆரோக்ய சேது செயலியில் பதிவு செய்யலாம்.
தடுப்பூசி போடலாம்
இதையடுத்து, இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் 60 வயதை எட்ட இருப்பவர்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் 45 வயதை அடைய இருப்பவர்கள், தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர்கள் குழு குறிப்பிட்டிருக்கும் இணை நோய் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை வழிகாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இணை நோயாளிகள்
கடந்த ஓராண்டில் இதய நோய் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, இதய நோயாளிகள் இணை நோய்கள் உடையவர்களாக கூறப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ரத்தப் புற்று நோய் உள்ளவர்கள், நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் உள்ளவர்கள், 2020 ஜூலை 1ம் தேதிக்கு பிறகு புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவர்கள், தற்போது புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள், எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள், அதீத உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் உள்ளவர்கள் உள்ளிட்டோர் இணை நோயாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2வது டோஸ் எப்போது?
Cowin செயலியில் பதிவு செய்யும்போது, ஆதார் அட்டை அல்லது வேறு ஒரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று தேவை. முதல் டோஸ் மருந்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தானாகவே இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யப்படும். முதல் டோஸ் மருந்து செலுத்திக் கொண்டதில் இருந்து 29வது நாள் முதல் 42வது நாளுக்குள், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு எப்போது வேண்டுமானாலும் ஒரு தேதியை பயனாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.