கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடுமையான ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆயுதபூஜை பண்டிகையை ஒட்டி பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
கோவில்களில் வாரத்தின் ஏழு நாட்களும் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மத கூட்டங்கள் நடத்தவும், அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு கொண்ட முதல்வர்.. கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்!
அலைமோதும் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வணிக வாளகங்கள், வணிக நிறுவனங்கள் நிறைந்த இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூடி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுத்துறை மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா
வரும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏராளமானோர் தேவர் நினைவிடத்தில் கூட வாய்ப்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200க்கு கீழ் குறைந்துள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தீபாவளி பண்டிகையொட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
பள்ளிகள் திறப்பு
நவம்பர் 1 முதல் மழலையர் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.
அரசு வழிகாட்டு நெறிமுறை
வணிக நிறுவனங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை உறுதி செய்வது உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல்கள் முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.