கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமே பொது போக்குவரத்துதான்.. மெடிக்கல் டீம் பகிரங்க தகவல்
சென்னை: பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாகி விட்டதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மருத்துவக்குழு உடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் ஊரடங்கை எங்கெல்லாம் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பிரதீப் கவுர் தலைமையிலான மருத்துவக்குழு, பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற தங்களது பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. சென்னையில் 10 ஆயிரம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு வேகம் இருமடங்கு ஆவது குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பா? முதல்வரிடம் மருத்துவக்குழு என்ன சொன்னது!
லாக்டவுன் தீர்வல்ல
ஆனால் கடந்த 2 வாரங்களில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் லாக்டவுனை தீவிரப்படுத்தலாம். ஏனெனில் லாக்டவுனை நீட்டிப்பது மட்டுமே கொரோனாவை தடுக்க தீர்வு அல்ல.
மருத்துவக்குழு
தமிழகத்தில் பொது போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாகவிட்டது" என்று மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தெரிவித்தது. சென்னையை போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.
திடீரென உயர்வு
தமிழக அரசு அண்மையில் மண்டலத்திற்குள் போக்குவரத்திற்னு அனுமதி அளித்தது. கடைகள் அனைத்தையும் ஏசிஇல்லாமல் திறக்க அனுமதித்தது. இதை பயன்படுத்தி பலரும் வாகனங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர். இதனால் பல இடங்களில் கொரோனா பாதிப்பு திடீரென இருமடங்காக உயர்ந்தது- கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, மதுரை, வேலூர், ராமநாதபுரம், தேனி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருமடங்கு என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது.
கொசுவை கொல்ல கோடாரி
இந்த சூழலில் தான் பொதுப்போக்குவரத்தால் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக விட்டதாக மருத்துவக்குழு வெளிப்படையாகவே செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது. இதேபோல் லாக்டவுனை நீட்டிப்பது என்பது கொசுவை கொல்ல கோடாரியை எடுத்து வெட்டுவது போன்றது என்றும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
இ பாஸ் கட்டாயம்
இதற்கிடையே பொதுப்போக்குவரத்திற்கு தமிழக அரசு அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி என கட்டுப்பாடு விதித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்என்றும் அறிவித்துள்ளது. இந்த சூழலில் மருத்துவக்குழுவின் பரிந்துரையால் பொதுப்போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.