11 மாவட்டங்களில் குறைவான மக்கள்தொகை.. சென்னையில் அதிகம்.. தொற்று குறைந்தது எப்படி?.. விஜய் ஆனந்த்
சென்னை: அதிக மக்கள்தொகை கொண்ட சென்னையை காட்டிலும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா குறையாதது ஏன் என்பது குறித்து கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த் விவரித்துள்ளார்.
Recommended Video
கொரோனா குறித்த புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்ட அன்றாடம் டிவிட்டரில் அப்டேட்டுகளை வழங்கி வருகிறார் விஜய்ஆனந்த்.
2024 லோக்சபா தேர்தல்: பிரசாந்த் கிஷோர் ஐடியா- காங். அல்லாத எதிர்க்கட்சிகளுடன் இன்று சரத்பவார் ஆலோசனை
இதுகுறித்து டேட்டா அனலிஸ்ட் விஜய் ஆனந்த் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டி கேள்வி, பதில் வடிவில் இதோ..
சாப்ட்வேர் துறை
கே: உங்களை பற்றி சொல்லுங்கள்
ப: நான் கடந்த 15 ஆண்டுகளாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது ஒரு நிறுவனத்தில் சீனியர் என்ஜினியரிங் மேனேஜராக பணியாற்றி வருகிறேன். கடந்த ஆண்டு முதல் ஆர்வத்தின் பேரில் கொரோனா குறித்த டேட்டாக்களை ஆய்வு செய்து வருகிறேன்.
கொரோனா அப்டேட் ஆர்வம்
கே: கொரோனா குறித்த டேட்டாக்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
ப: கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அந்த நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள். நிறைய போலி செய்திகளை நம்பி இருந்தார்கள். மக்களுக்கு நோய் குறித்த தவறான புரிதல் நிறையவே இருந்தது. என்னுடைய நண்பர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் பேக்ட் செக்கிங் போல் தொடங்கினேன். மக்களுக்கு சரியான டேட்டாவை எப்படி எடுத்துச் செல்வது என்பதற்காக முயன்றேன். அதன் பின்னர் இதை அன்றாடம் ட்விட்டரில் அப்டேட் செய்து வந்தேன். டேட்டா இன்சைட்ஸை வைத்து மக்களுக்கு எளிய முறையில் எப்படி தெரிவிக்கலாம் என யோசித்து செய்ததுதான் இது. வெளிநாடுகளிலும் இது போன்ற ஆய்வாளர்கள் உள்ளார்கள். நம் தமிழகத்தில் அரசு கொடுக்கும் தகவலை வைத்து மக்களுக்கு புரியும் வகையில் டேட்டாக்களை கொடுத்து வருகிறேன்.
குறைந்த மக்கள் தொகை
கே: கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. இவை சென்னையை விட குறைவான மக்கள்தொகை கொண்டவை என்ற போதிலும் இங்கு ஏன் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.
ப: இதை ஒரு பேட்டர்னாக பார்த்தோமேயானால் முதலில் முக்கிய நகரங்களில் இருந்துதான் கொரோனா பரவல் தொடங்குகிறது. அதாவது மக்கள்தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களிலிருந்துதான் கொரோனா தொடங்குகிறது. இந்த கொரோனா இரண்டாவது அலை பார்த்தோமேயானால் அனைத்து 2 டயர், 3 டயர் நகரங்களுக்கும் இது பரவி வருகிறது. ஏப்ரல் மாதமே லாக்டவுனை அறிவித்தார்கள். அப்போது கூகுள் மொபிலிட்டி டேட்டா என ஒன்று உள்ளது. அதாவது மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது. இது கொரோனாவுக்காக கூகுளில் ஒரு அனாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறோம்.
அந்த மாவட்டங்களை எடுத்து பார்த்தோமேயானால் சென்னையை பொருத்தமட்டில் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரு ஊரடங்கு அறிவித்திருந்தார்கள். அப்போதே மக்கள் வெளியே வருவது குறைவாக இருந்தது. இதை மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்த்தேன். அதாவது ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு போட்ட பிறகுதான் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகம் கூடாததால் தற்போது சென்னைக்கு சீக்கிரமாக தொற்று குறைந்ததாக கருதுகிறேன்.
கேஸ்கள் அதிகம்
கே: கொங்கு மண்டலங்களில் கடந்த சில வாரங்களாக கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்?
ப: கொங்கு மண்டலங்கள் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாவட்டங்கள். ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த இரு வாரங்களாக அங்கு கொரோனா பரவல் குறைந்து கொண்டுதான் வருகிறது. கோவையில் 11 ஆயிரம் பேரும், ஈரோட்டில் 8,900 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் அதிகம் வந்து கொண்டிருந்த ஈரோட்டில் கூட தற்போது கேஸ்கள் குறைந்துவிட்டன. அனைத்து மாவட்டங்களிலும் நேற்று (நேற்று முன் தினம்) ஆயிரத்திற்கு குறைவானவர்கள்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பிரேக் தி செயின்
கே: லாக்டவுனால் கொரோனா பரவல் குறைந்து சங்கிலிகள் அறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா
ப: கண்டிப்பாக, சென்னையில் லாக்டவுன் தீவிரப்படுத்தியதால்தான் கொரோனா தொற்று குறைந்துள்ளது. 20 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மே 11 ஆம் தேதி 27.7 சதவீதம் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் (100 பேருக்கு கொரோனா சோதனை செய்தால் அதில் 27 சதவீதம் பேருக்கு கொரோனா பாசிட்டிவ்- இதுதான் test positivity rate)இருந்தது. ஜூன் 20 ஆம் தேதி பாசிட்டிவிட்டி ரேட் ஆனது 1.58 சதவீதமாக உள்ளது. இதற்கு முழு காரணம் லாக்டவுன் போட்டது, மக்களும் லாக்டவுனை கடைப்பிடித்திருக்கிறார்கள். சென்னையில் மே 10-ஆம் தேதி பார்த்தோமேயானால் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை இருந்தது. இந்த தகவலை அறிந்த மக்கள் அச்சமடைந்து கொண்டு தேவையில்லாமல் வெளியே வருவதை குறைத்துக் கொண்டனர். லாக்டவுனால் மட்டுமே சென்னையில் கொரோனா செயின் உடைந்துள்ளது என்றார்.