2 கொரோனா வேக்சின்கள்.. சென்னை உட்பட 6 நகரங்களில் வேகமாக மனித சோதனை.. இந்தியாவின் மாஸ்டர் பிளான்!
சென்னை: இந்தியாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்யும் பணிகள் தீவிரம் எடுத்துள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க 120 நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது.
ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா உற்பத்தி
இந்த நிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் இரண்டு தற்போது மனித சோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேறு வேறு நிறுவனங்களின் மருந்துகள் தற்போது மனித சோதனை கட்டத்தில் இருக்கிறது.ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.
சைடஸ் கெடில்லா
இன்னொரு பக்கம் இந்தியாவை சேர்ந்த சைடஸ் கெடில்லா (Zydus Cadila) நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்கள் மீது சோதனை செய்ய மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு மனித சோதனை நிலை 1, மனித சோதனை நிலை 2 ஆகிய இரண்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் இறுதியில் ஆய்வக முதற்கட்ட சோதனைகள் வெற்றிபெற்ற நிலையில், இவர்கள் மனித சோதனையை செய்ய உள்ளனர்.
எங்கே சோதனை
இந்த இரண்டு மருந்துகளை மொத்தமாக இந்தியாவில் 6 முக்கியமான நகரங்களில் சோதனை செய்ய இருக்கிறார்கள். 6 நகரங்களில் இருக்கும் 12 கல்வி நிறுவனங்கள் மூலம் இந்த மனித சோதனையை செய்ய உள்ளனர். இதில் கோவாக்சின் மருந்து ஏற்கனவே சென்னையில் இருக்கும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் மனித சோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு மனிதர்கள் மீது இந்த மருந்தை செலுத்துவிட்டு, ஆய்வுகள் நடந்து வருகிறது.
எய்ம்ஸ்
அதன்பின் நேற்று டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நபர் ஒருவருக்கு 0.5 எம்எல் கோவாக்சின் மருந்து கொடுக்கப்பட்டது. 30 வயது நபருக்கு மருந்து கொடுக்கப்பட்டது. டெல்லி, பாட்னா, மும்பை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் இந்த தடுப்பு மருந்து சோதனையை செய்ய இருக்கிறார்கள். இதில் பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 15ம் தேதியே மனித சோதனை தொடங்கிவிட்டது.
மீண்டும் சோதனை
அங்கு 11 பேர் மீது இந்த மருந்து கொடுக்கப்பட்டது. சென்னை, டெல்லி, பாட்னா, ரோஹ்டாக் ஆகிய பகுதிகளில்தான் மனித சோதனை தற்போது செய்யப்பட உள்ளது. மருந்து கொடுக்கப்பட்டு 20 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாம் கட்ட மருந்து கொடுக்கப்படும். அதுவரை மருந்து கொடுக்கப்பட்ட நபர்கள் தீவிரமாக வீட்டில் வைத்தே கண்காணிக்கப்படுவார்கள்.
500 பேர்
மொத்தமாக முதற்கட்டமாக 6 நகரங்களில் 500 பேரிடம் இந்த மருந்தை சோதனை செய்ய இருக்கிறார்கள். அதன்பின் முடிவை பொறுத்து இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்வார்கள். இதுவரை செய்யப்பட்ட சோதனை பாதுகாப்பாக இருக்கிறது. எந்த விதமான பின்விளைவுகளும் வரவில்லை. மருந்து கொடுக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் போல லேசான காய்ச்சல் மட்டுமே வந்துள்ளது. அதனால் பயப்பட தேவை இல்லை என்கிறார்கள்.
பாதுகாப்புதான்
விரைவில் கோவாக்சின் மருந்தின் முதல்கட்ட மருந்து சோதனை முடிவுகள் வெளியே வர வாய்ப்புள்ளது. இந்தியா தற்போது தனது மனித சோதனையை துரிதப்படுத்த முயன்று வருகிறது. ஏனென்றால் ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு கல்வி மையங்கள, நிறுவனங்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாதான் உற்பத்தி செய்ய போகிறது.
இந்தியா மாஸ்டர்பிளான்
இதனால் இந்தியாவிலேயே மருந்தை உருவாக்கி, அதையே இந்தியாவிலேயே உற்பத்தி செய்தால் இன்னும் எளிதாக இருக்கும் என்று இந்தியா நினைக்கிறது.தற்போது 60 நாடுகளுக்கு இந்தியாதான் மருந்துகளை ஏற்றுமதி செய்ய போகிறது. 100 மருந்துகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனம் உடன் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்து அதிக நம்பிக்கை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. விரைவில் இந்திய மருந்தை மார்க்கெட்டுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது .