கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்
தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 2783 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்ட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தடுப்பூசி செலுத்தப்பட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மக்கள் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இன்றைய தினம் 16600 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் வெறும் 2783 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அச்சம் காரணமாகவே பதிவு செய்த பலரும் இன்றைய தினம் தடுப்பூசி செலுத்த பலரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு எதிரான உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். தமிழகத்தில் மதுரையில் முதல்வர் பழனிச்சாமி தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கோவிஷீல்ட், கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள், தாமாக முன்வருபவர்களுக்குப் போடப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.முதற்கட்டமாக கொரோனா தடுப்பில் முன்கள வீரர்களாச் செயல்படும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
நாடு முழுவதும் 3,000 தடுப்பூசி மையங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில், பிரதமர் காணொளி வாயிலாக இதனை தொடக்கி வைத்த பிறகே தடுப்பூசி போடுவது தொடங்கியது. முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்ததன்படி, செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் கோவின் என்ற செயலியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் 166 மையங்களில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி 2783 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எதிர்பார்த்த அளவை விட குறைந்த அளவிலேயே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
மக்கள் நம்பிக்கையை அதிகரிக்க.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட.. பாஜக எம்பி, திரிணாமுல் காங். எம்எல்ஏ
முன்களப்பணியாளர்களின் தயக்கம் மற்றும் அச்சம் காரணமாகவே குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மத்திய அரசின் அனுமதி பெற்று தானும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
Recommended Video
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திய யாருக்கும் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இன்றைய தினம் 100 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது. 16600 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் 2783 பேர் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.