இதை மட்டும் செஞ்சா போதும்.. மக்களை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.. தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
கொரோனாவை ஒழிக்க அரசு மேலும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
சென்னை: கொரோனா வைரஸுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை குறை சொல்ல முடியாது.. அதி தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது... அதிரடிகளை கையில் எடுத்துள்ளது. வரவேற்கத்தக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. என்றாலும் ஒருசில குறைகளும் எழாமல் இல்லை.. அவைகளையும் சரிப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாக உள்ளது!
முதலில், கொரோனா அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களை பரிசோதித்து தனிமைப்படுத்திவிட வேண்டும்.. இதுதான் சுகாதாரத்துறையின் முதல் வேலை.. ஆனால் சில சுகாதார ஊழியர்கள் அறிகுறியுடன் வந்தால், பரிசோதித்துவிட்டு திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது.
இவர்களை தனிமைப்படுத்துவதில்லை.. திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு ஒருவேளை கொரோனா தொற்று உறுதி இருந்துவிட்டால், அவர்களால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள், எத்தனை பேருக்கு தொற்றை பரப்புவார்கள் என்ற சந்தேகமும் பயமும் எழுகிறது. அதனால் முதல் வேலையாக அறிகுறி என்று வந்தாலே இவர்களை உடனடியாக திருப்பி அனுப்பிவிடாமல் அவர்களை தனிமைப்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.
முத்திரை
அடுத்ததாக, கண்காணிப்பில் உள்ளவர்கள் தப்பிவிடுவது ஆங்காங்கே நடந்து வருகிறது.. ஈரோட்டில் இன்றுகூட கண்காணிப்பில் இருந்த 2 பேர் தப்பியோடி விட்டனர்.. இவர்கள் தாய்லாந்தில் இருந்து வந்தவர்களாம்.. கட்டுப்பாடுகளுடன் கையில் சீல் வைத்து கண்காணித்து வந்திருந்த நிலையில்தான் இவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.. எப்படி இவர்கள் தப்பினார்கள்? எந்த வகையில் அலட்சியம் நடந்தது என தெரியவில்லை.. ஆனால் கண்டிப்பாக இந்த 2 பேரில் யாருக்கு தொற்று இருந்தாலும் அது பல உயிர்களை காவு வாங்கும் அபாயம் உள்ளது.
தப்பிவிட்டனர்
எனவே இந்த முத்திரை விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தலாம்.. சில தினங்களுக்கு முன்பு மஹாராஷ்டிராவில் 15 பேர் இப்படித்தான் கொரோனா கண்காணிப்பில் இருந்தனர்.. திடீரென அவர்கள் தப்பிவிட்டனர்.. அதனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் மட்டுமல்ல, மகாராஷ்டிராவிலே ஆடிப்போய் விட்டது.. பிறகு எப்படியோ அவர்களில் சிலரை கண்டுபிடித்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துவிட்டனர் என்றாலும், அப்போதுதான் கையில் சீல் வைப்பது என்ற சிறந்த வழியை கண்டுபிடித்தனர்.
இடது கையில் சீல்
வெளிநாடு போய்விட்டு வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கையில் சீல் குத்திவிடுகின்றனர். இதனால் தப்பிவிட்டாலும் அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு ஒதுங்குவர், ஒப்படைப்பர்.. இவர்களை பார்த்துதான் உபியிலும் கைகளில் சீல் அடிக்கும் பணி நடக்கிறது. வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் அடையாள மை மூலம்தான் இந்த சீல் வைக்கிறார்கள்.. இது 14 நாட்களுக்கு அழியாமல் இருக்கும். இதுபோல தமிழகத்திலும் முத்திரை குத்தப்படுகிறது.. ஆனால் வெளிநாடு போய்விட்டு வந்தவர்களுக்குதான் இந்த முத்திரை குத்தப்படுவதாகவும், தொற்று என்று சந்தேகத்தில் வருபவர்களுக்கு முத்திரை குத்தப்படுவதில்லை என்று பரவலாக சொல்லப்படுவதால், இதை முழுமையாக தீவிரப்படுத்த வேண்டும்!
சிங்கப்பூர்
அதேபோல ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டால் உடனடியாக அவர் சம்பந்தப்பட்டவர்களையும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்.. இதற்கு உதாரணமாக சிங்கப்பூரை சொல்லலாம்.. அது ஒரு சின்ன நாடுதான்.. ஆனால் சமயோஜிதமாக நடவடிக்கை எடுத்தனர்.. சீன தம்பதி குழந்தையுடன் சிங்கப்பூருக்கு பயணமாக வரவும், திடீரென இவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய் உள்ளது.. டெஸ்ட் செய்தபோதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு என தெரிந்தது. சிங்கப்பூரை பொறுத்தரை இவர்கள்தான் முதல் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள்!!
வாய்ப்பு குறைவு
இதையடுத்து, இந்த தம்பதி சிங்கப்பூரில் எங்கெங்கு சுற்றி பார்த்தார்கள், எங்கெங்கு தங்கியிருந்தனர், அந்த இடத்தில் இருந்தவர்கள் யார், தொடர்பில் இருந்த வட்டாரங்கள் என்ன என ஒட்டுமொத்தமாக டிரேஸ் செய்து, மொத்தம் 6 ஆயிரம் பேரை சுற்றி வளைத்துவிட்டனர். இவர்களை அலேக்காக கொண்டு வந்து வைத்து சிங்கப்பூர் அரசு கண்காணிப்பில் வைத்துள்ளது.. இவர்களில் நூற்றுக்கான சிலருக்கு தொற்று உள்ளது, மற்றவர்கள் அரசின் கண்காணிப்பிலேயே தொடர்ந்து உள்ளனர். இப்படித்தான் நாமும் செய்ய வேண்டும். தொற்று உறுதி என்று தெரிந்தவுடனேயே அவர்களை சார்ந்தவர்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தினால் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது.
பிரச்சாரம்
அடுத்தபடியாக, கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மிக குறைவாகவே உள்ளது.. நகர்ப்புறவாசிகள் சோஷியல் மீடியாவில் வரும் தகவல்களை கண்டும், படித்தும் ஓரளவு உஷார் ஆகின்றனர்.. ஆனால் குக்கிராமவாசிகளுக்கு இந்த பெயரே வாயில் இன்னும் நுழையாமல் உள்ளது.. இதை பற்றின விழிப்புணர்வும் குறைவு... இவர்களுக்கு எந்த ஒரு சீரியஸ் விஷயத்தையும் வெறும் செய்தி மூலமாக மனதில் பதிய வைத்துவிட முடியாது.. தண்டோரா, வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா குறித்து கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.. இது சம்பந்தமான விழிப்புணர்வு பாடல்களையும் ஏற்படுத்த வேண்டும்!!
சட்டவிதி
இறுதியாக ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டுக்கு கட்டாயம் தேவை.. 144 தடை உத்தரவினால் ஒரு இடத்தில் 5 பேர் ஒன்றாக கூடலாம்.. இதுதான் சட்ட விதி.. ஆனால் 5 பேர் ஒன்றாக கூடுவது என்பது கூட இன்றைய நாளில் மிக மிக ஆபத்து.. ஊரடங்கு ஒன்றுதான் சரியான தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும்.. சுய ஊரடங்கு என்று சொல்லியுமே அன்று பலர் நடமாடி கொண்டிருந்தனர். ஒருத்தர் கறி கடையை காலங்காத்தாலேயே திறந்து வைத்து உட்கார்ந்துவிட, அங்கேயும் கூட்டம் வரிசை கட்டியது பெரும் வேதனையைதான் ஏற்படுத்தியது.
144 தடை
அதனால், 144 என்பதற்கு பதிலாக ஊரடங்கு உத்தரவினை கையில் எடுக்க வேண்டும். இரும்புக் கரம் கொண்டு அடக்கினால்தான் மக்களை காக்க முடியும்... வேறு வழியில்லை.. கண்டிப்பும், கறாராரும், கெடுபிடியும் காட்ட வேண்டி உள்ளது.. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அதேசமயம், யாரும் இதனால் பாதிக்காத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அரசின் அவசியமாகிறது.
வெளிப்படைத்தன்மை
இது எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக அரசு தன்னுடைய வெளிப்படைத்தன்மையை சற்று அதிகரித்தால் நன்றாக இருக்கும்.. வெளிப்படைத்தன்மை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு தமிழக மக்களுக்கு ஒரு நிம்மதி வரும்.. தேவையில்லாத கலக்கம், பீதியும் குறையும்.. அதுமட்டுமல்ல, கொரோனா பாதிப்பு, எண்ணிக்கை, ஆபத்து குறித்த நிகழ்வுகள் அப்பட்டமாக தெரிந்தால்தான், மக்களுக்கு ஒருவித பயஉணர்வு வரவும் வரும்.. அந்த பய உணர்வுதான் இப்போதைக்கு மக்களுக்கு உடனடி தேவையும்கூட!!!