கோவிஷீல்டு vs கோவாக்சின்.. எந்த தடுப்பூசி அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும்..புதிய ஆய்வு முடிவுகள்
சென்னை: சுகாதார ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சோதனையில் கோவாக்சின் தடுப்பூசியைக் காட்டிலும் கோவிஷீல்டு தடுப்பூசி அதிகளவிலான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும் என அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கோவிஷீல்டு மற்றும் கோாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்டன.

கோவிஷீல்டு vs கோவாக்சின்
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளில் எது சிறந்தது என்ற சந்தேகம் பலருக்கும் இயல்பாகவே உள்ளது தான். 2 தடுப்பூசிகளுமே தீவிர கொரோனா பாதிப்பைத் தடுக்கிறது என்பதால் எந்தத் தடுப்பூசி கிடைத்தாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் உடலில் உற்பத்தி செய்யும் ஆன்டிபாடிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பூசிகள்
நாடு முழுவதும் உள்ள 515 சுகாதார ஊழியர்களிடம்(305 ஆண்கள், 210 பெண்கள்) இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில் கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 425 பேரின் உடலில் 98.1% மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 90 பேரின் உடலில் 90% ஆன்டிபாடிகள் உற்பத்தி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக, மூன்றாம்கட்ட மருத்துவ சோதனைகளில் கோவிஷீல்டு தடுப்பாற்றல் 70%ஆகவும் கோவாக்சின் தடுப்பாற்றல் 81%ஆகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆன்டிபாடிகள் உற்பத்தி
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டும் நல்ல நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டினாலும், கோவாக்சினுடன் ஒப்பிடும்போது ஆன்டிபாடிகள், ஸ்பைக் ஆன்டிபாடி ஆகியவை கோவிஷீல்ட் தடுப்பூசியில் சற்று அதிகமாக இருந்ததை ஆய்வுகள் காட்டுகின்றன. ரத்தத்தில் எவ்வளவு ஆன்டிபாடிகள் உள்ளன என்பதைக் கண்டறியும் Antibody titer சோதனையில் கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்களிடம் அது 115 AU/mlஆகவும் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களின் அது 51 AU/ml ஆகவும் இருந்தது தெரிய வந்தது.

உயிரிழப்புகள் இல்லை
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்த முன்களப் பணியாளர்களில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் 25 பேருக்கு லேசான கொரோனா பாதிப்பும் 2 பேருக்கு மிதமான கொரோனா பாதிப்பும் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. பாலினம், பிஎம்ஐ, ரத்த மாதிரி, வயது உள்ளிட்டவை 2 தடுப்பூசிகளில் பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து
கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து கோவிஷீல்டு எடுத்துக்கொண்ட 399 பேரில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதாவது கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து 5.5%ஆகும் அதேபோல கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 90 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதாவது கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து 2.2%ஆகும்.

2 தடுப்பூசிகள்
இதில் முக்கியமானது என்னவென்றால் 2 தடுப்பூசிகளுமே உயிரிழப்புகளை 100% வரை தடுக்கின்றன. எனவே, பொதுமக்கள் 2 தடுப்பூசிகளில் எது கிடைத்தாலும் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வீழ்த்தும் ஒரே ஆயும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications