நாகை, திருப்பூர் இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
மறுபடியும் பி.ஆர். நடராஜனா.. சோர்வில் திமுக.. சலசலப்பில் கூட்டணி
அந்த வகையில், நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்வராசு போட்டியிடுகிறார். இவர், ஏற்கனவே 3 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதே போன்று திருப்பூர் தொகுதியில், சுப்பராயன் போட்டியிடுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோல், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.