குமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்!
சென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய் பேசுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் கேபினட் அமைச்சர் பதவி குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்தியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழிசை சொல்வதை பொய் என நிரூபித்தால் தமிழிசையும் மோடியும் அரசியலை விட்டு ஓடுவார்களா என ஸ்டாலின் சவால் விட்டார்.
நிரூபிப்பேன்
இதைத்தொடர்ந்து ஸ்டாலின் பாஜகவுடன் பேசியதும் உண்மைதான் நான் சொல்வதும் உண்மைதான் என்றார் தமிழிசை. அதனை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்பேன் என்றும் கூறினார் தமிழிசை.
2 ஆண்டுகளாக போராட்டம்
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாக மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
கடும் கண்டனம்
தமிழிசை கூறும் குற்றச்சாட்டு திமுக தலைமை மீதானது மட்டும் அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி மீதே தமிழிசை குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழிசை ஸ்டாலின் மீது கூறிய குற்றச்சாட்டு கண்டனத்திற்குரியது.
தலைவரைப் போல்
பொய்கள் பாஜகவின் மூலதனமாகிவிட்டது. பிரதமர் மோடி பொய்களை கூறியே அரசியல் நடத்தி வருகிறார். தங்கள் தலைவர் மோடியை போலவே தமிழிசையும் பொய் பேசி வருகிறார்.
பொய் சொல்லக்கூடாது பாப்பா
மரியாதைக்குரிய குமரி ஆனந்தன் அவர்களின் மகளே, பாரதியார் பாடல் ஒன்று உள்ளது, பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று. அந்த பாடல் பாப்பாவுக்குதான் எனக்கில்லை என தமிழிசை பொய்களை அடுக்கி வருகிறார். தமிழிசை உண்மையை பேச வேண்டும்.
ஜனநாயகத்திற்கு விரோதமானது
கோட்சேவுக்கு ஆதரவாக அமைச்சரும் பாஜகவினரும் பேசி வருவது வியப்பாக உள்ளது. கமல் பிரச்சாரத்திற்கு தடை கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.