வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்.27-ல் பாரத் பந்த்- மறியல் போராட்டங்கள் நடத்த இடதுசாரிகள் வேண்டுகோள்
சென்னை; மத்திய பா.ஜ.க.அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 27-ல் நடைபெறும் பாரத் பந்த், தமிழகத்தில் முழுமையாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ, சி.பி.எம்., சி.பி.ஐ (எம்.எல்.) ஆகிய கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சி.பி.ஐ (எம்.எல்) செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை எதிர்த்தும் தலைநகர் புதுதில்லியில் 11 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
சட்டசபை தீர்மானங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் விவசாயிகளுக்கு விரோதமான இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோல் கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவையிலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செப்.27-ல் பாரத் பந்த்
இவைகளை உதாசீனப்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) சார்பில் செப்டம்பர் 27-ந் தேதி அகில இந்திய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றன.
சாலை மறியல், ரயில் மறியல்
இப்போராட்டத்தில் இடதுசாரி கட்சி தோழர்கள் தமிழகம் முழுவதும் அதிகமான மக்களை திரட்டி சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பந்த் போராட்டத்தை விளக்கி மக்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் ஆதரவு தர வேண்டுகோள்
இந்திய விவசாயிகளை வஞ்சித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரும் ஒன்றிய பாஜக அரசினை கண்டித்து நடைபெறும் இந்த அகில இந்திய பந்த் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் இப்போராட்டத்திற்கு பேராதரவு அளிக்க வேண்டுமென சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) கட்சிகளின் சார்பில் தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.