Job or Jail, Save India Change India முழக்கங்களால் தேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த டி.ராஜா!
சென்னை: 95 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான தமிழரான டி. ராஜா தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 45 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை ஏற்று தற்போது பொதுச்செயலாளராகி உள்ள டி.ராஜா முன் உள்ள சவால்கள் ஏராளம்.
ராஜ்யசபா எம்.பி.யாக 2 முறை பணியாற்றிவிட்டு நேற்று டி. ராஜா ஓய்வு பெற்றார். அப்போது அவர் பேசுகையில், "சபையில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. ஆனால் மக்கள் பணியில் இருந்து அல்ல" என கூறியிருந்தார். மேலும் சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபட வேண்டும்" எனவும் முழங்கியிருந்தார்.
இப்படியான போராட்ட குணம் கொண்டவர்தான் டி.ராஜா. இடதுசாரிகளின் ஒற்றுமை, சமூக நீதி, தமிழர் நலன் என அனைத்திலும் ஒரு திராவிடர் இயக்கத்தவரைப் போல சிந்தித்தவர். இடதுசாரிகள் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஒருவித மவுனம் சாதித்த போது அதை உடைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அரவணைத்தவர் டி. ராஜா.
1960களில் இ.கம்யூ
69% இடஒதுக்கீடு விவகாரத்தில் இடதுசாரிகள் கமுக்கத்தை கடைபிடித்த போது ஆதரவு குரல் கொடுத்தவர் டி.ராஜா. 1960களில் இளைஞர்கள் திராவிடர் இயக்கத்தை நோக்கி படையெடுத்த காலத்தில், திமுகவில் இளைஞர்கள் அரசியல் ஏற்றம் பெற்று அதிகாரத்தை நோக்கி பயணித்த தருணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
மாஸ்கோவில் கட்சிக்கான தத்துவ பாடம்
அதுவும் மார்க்சிஸ்டுகளாக, நக்சல்பாரிகளாக இந்திய கம்யூனிஸ்டுகள் அவதாரம் எடுத்திருந்த காலத்தில் இடதுசாரிகளின் தாய் அமைப்பான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் இணைந்தார் டி.ராஜா. சில ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே டி.ராஜாவை மாஸ்கோ அனுப்பி தத்துவம் படிக்க வைத்தது. பின்னர் நாடு கொந்தளிப்பாக இருந்த 1974-ல் இந்தியா திரும்பிய டி. ராஜா கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக ஒப்படைத்துக் கோண்டார்.
போராட்டங்களில் ராஜா
எமர்ஜென்சி அமலில் இருந்த 1976-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் மாநில செயலாளரானார். அந்த காலகட்டத்தில்தான் Job or Jail என முழங்கி வேலை இல்லா திண்டாட்டத்துக்கு எதிரான போராட்டங்களை டி.ராஜா முன்னெடுத்தார். 1985-ல் அகில இந்திய இளைஞர் சம்மேளனத்தின் தேசிய செயலாளராக தேர்வாகி தேசிய அரசியலை நோக்கிய பயணத்தை தொடங்கினார்.
கால்நூற்றாண்டு கால தேசிய செயலர்
அவரது தலைமையிலான இளைஞர் படை Save India- Change India முழக்கத்துடன் பஞ்சாப் பிரிவினைவாதிகளுக்கு எதிராக களமிறங்கியது. 1994 முதல் 25 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக பதவி வகித்து தற்போது பொதுச்செயலாளராகி இருக்கிறார் ராஜா.
சவால்கள் ஏராளம்
இடதுசாரிகள் இந்திய அளவில் செல்வாக்கை இழந்து நிற்கிற காலம்.. இந்துத்துவா சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு மமதையுடன் தமது செயல்திட்டங்களை திணிக்கின்ற ஊழி காலம்.. இடதுசாரிகளும் திராவிட இயக்கமும் மதச்சார்பற்ற மாநில உரிமை கோரும் சக்திகளும் ஒன்றாக நின்று இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக சங்கநாதம் எழுப்ப வேண்டிய கட்டாயம்.. இத்தருணத்தில் டி.ராஜா, 100-வது ஆண்டை நோக்கி கட்சி பயணிக்கும் நிலையில் பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கிறார்.
ஒரே கட்சியாக இடதுசாரிகள்
அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது இடதுசாரிகளின் ஒற்றுமை. இடதுசாரி கட்சிகளை ஒரே கட்சியாக்கி வரலாறு படைப்பாரா? தமிழகத்தைப் போல இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான ஒரு கூட்டணிக்கு அச்சாணியாக டி.ராஜா இருப்பாரா? என்பதுதான் ஜனநாயக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.